அப்பல்லோவில்தான் அம்மாவுக்கு தீபாவளியா? 37வது நாளாக சிகிச்சையில் ஜெ., தொடரும் பிரார்த்தனைகள்
சென்னை: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அப்பல்லோ மருத்துவனையில் ஜெயலலிதா 37வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றாலும், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் அனுமதி கொடுத்தால் மட்டுமே முதல்வர் ஜெயலலிதா போயஸ்கார்டனில் தீபாவளி கொண்டாட முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 22ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதா. 37 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் ஜெயலலிதா.
அப்பல்லோ மருத்துவமனை வாசலில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்கள் வரை அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகளின் சிறப்பு பூஜைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தீபாவளிக்கு முன்பாகவே ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்று தகவல் பரவியதைக் கேட்டு சற்றே உற்சாகம் அடைந்திருந்த தொண்டர்கள், அதற்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறாதது கண்டு சோகத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பினால் ஜெயலலிதா முன்பு இருந்த நிலையில் இருந்து மீண்டு விட்டாராம். முழு நினைவுடன்தான் இருக்கிறாராம்.
சிங்கப்பூர் மருத்துவர்கள் கொடுத்த பிஸியோதெரபி சிகிச்சையின் விளைவாக, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
இன்று காலை முதல் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் தீவிரமான ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள். அவரது உடல்நலம் தொடர்பான பல்வேறு அறிக்கைகள், பரிசோதனைகளைச் செய்தவர்கள் அதை லண்டன் மருத்துவர் ரிச்சர்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். இவர்களது ரிப்போர்ட்டுகளை வைத்து ரிச்சர்ட் ஆய்வு செய்து ஜெயலலிதா டிஸ்சார்ஜ் தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும்.
சனிக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பே அவரை போயஸ் கார்டனுக்கு அழைத்துச் செல்ல விரும்பினார் சசிகலா. ஆனால் அதற்கான கிரீன் சிக்னல் இன்னும் மருத்துவர்களிடம் இருந்து கிடைக்கவில்லையாம்.
ஜெயலலிதா இம்முறை தீபாவளி நாளில் எங்கு இருப்பார்? இரவுக்குள் ஏதாவது நல்ல செய்தி வெளியாகுமா என்று ஆவலுடன், முதல்வர் பூரண நலம் பெற்றுத் திரும்பி, அவர் நீண்ட ஆயுளுடன் அவர் வாழ வேண்டும் எனவும் தொண்டர்களின் வழிபாடு தொடந்து கொண்டே இருக்கிறது.