அப்பல்லோ தலைவரே பிரஸ் மீட் பண்ணிட்டாரே.. அப்போ 'அம்மா' ஆல்-ரைட்! #Jayalalitha
ஜெயலலிதா உடல் நலன் தேறி வருவதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி பிரஸ் மீட் வைத்து தெரிவித்துள்ளார் என்பதால் அதிமுகவினர் குஷியாக உள்ளனர்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியே, முன்வந்து பிரஸ் மீட் செய்துவிட்டார் என்றால், அப்போ அம்மா ஆல்-ரைட் என்று உற்சாகத்தில் மிதக்கிறார்கள் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும்.
இருக்காதா பின்ன.. இத்தனை நாட்களாக மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் ரெட்டி பட்ட பாடு உலகத்திற்கே தெரியுமே. அதிகாரி பெயரில் ஒரு அறிக்கையை அவ்வப்போது வெளியிடுவதோடு நிறுத்திக்கொண்ட அப்பல்லோ, இன்று அதிகார தோரணையோடு பிரஸ் மீட் அரேன்ஜ் செய்துள்ளது என்றால் விஷயம் இல்லாமலா?
ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட பிறகு, அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி முதல் முறையாக மீடியாக்கள் பார்வையில் பட்டது, ஆளுநரின் அப்பல்லோ விசிட்டின்போதுதான். அப்போது ஜெ. உடல் நலம் பற்றி வதந்திகள் றெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தன. ஆளுநர் விசிட் செய்து அதை ஆறப்போட்டார். அப்போது ஆளுநருடன் ஒன்றாகவே இருந்து ஜெயலலிதா உடல் நிலை குறித்து விளக்கினார் பிரதாப் ரெட்டி.

இதன்பிறகு ராகுல் காந்தி, அருண் ஜேட்லி போன்ற முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது, "பிரதாப் ரெட்டி அவர்களுக்கு விளக்கம் அளித்தார்" என ஒரு பத்திரிகை குறிப்பு வரும். அத்தோடு அவர் பாத்திரம் நிறைவடைந்தது. ஆனால் இன்றுதான் பிரஸ் மீட் செய்து ஜெயலலிதா உடல் நிலை குறித்து அறிவித்தார் பிரதாப் ரெட்டி.
"எக்குத்தப்பான கேள்விகளை சமாளிக்கும் அளவுக்கு கையில் சரக்கு இருந்தால்தான் பிரஸ் மீட் நடத்த முடியும். இப்போது சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் பிரதாப் ரெட்டி பிரஸ் மீட் செய்துள்ளார். ஜெயலலிதா முழுக்க குணமடைந்துவிட்டார் என்பதற்கு பிரதாப் ரெட்டி நடவடிக்கையே நல்ல சான்று" என்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர்.
ஜெயலலிதா உடல் நிலை தேறிவருவதை கடந்த இரு நாட்களாகவே உடனுக்குடன் செய்தியாக வெளியிட்டு வந்தது 'ஒன்இந்தியா' . சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.., விரும்பிய உணவை சாப்பிட ஆரம்பித்துள்ளார்.. போன்ற தகவல்களை முந்தி தந்தது 'ஒன்இந்தியா'. முதல்வர் நலமடைந்த செய்தியை சி.ஆர்.சரஸ்வதி, பொன்னையன் போன்றோரும் இன்று உறுதி செய்தனர். இந்த நிலையில் பிரதாப் ரெட்டி முதல் முறையாக இந்த விஷயத்தில் வாய் திறந்துள்ளது செய்திகளை உண்மையாக்கியுள்ளது.
இனி என்ன.., அதிமுக கட்சியினரும், முதல்வர் நலம் விரும்பும் கோடிக்கணக்கான தமிழக மக்களும் மற்றொரு தீபாவளியை கொண்டாட சர வெடியோடு தயாராக வேண்டியதுதான் பாக்கி.












Click it and Unblock the Notifications