அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் விழுந்த குட்நியூஸ்.. சரக்கு முனையம்? ராணிப்பேட்டைக்கு மகிழ்ச்சி
ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் அதிநவீன சரக்கு முனையம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.. இதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது.
மத்திய அரசின் "கதி சக்தி" திட்டத்தின் கீழ், ரயில்வேயில் தனியார் பங்களிப்போடு, புது புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன... முக்கியமாக, சரக்குகளை கையாளும் வகையில் ரயில்வே ஷெட்டுகள் அமைப்பது, புதிய சரக்கு முனையம் அமைப்பது போன்ற பணிகள் இந்த திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வகையில், அரக்கோணம் ரயில் நிலையம் அருகே, ரயில்வே மற்றும் தனியார் பங்களிப்போடு, 50 கோடி ரூபாயில், புதிய சரக்கு ரயில் முனையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.
சரக்கு முனையம்: அந்தவகையில், சென்னை ரயில்வே கோட்டம், கதி சக்தி மல்டிமோடல் கார்கோ டெர்மினல் பாலிசி-2022 திட்டத்தின் கீழ், அதிநவீன ரயில்வே சரக்கு கையாளும் முனையத்தை நிறுவுவதற்கும், இயக்குவதற்கும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அரக்கோணம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள சுமார் ஒரு லட்சம் சதுர மீட்டர் ரயில்வே நிலப்பரப்பில் இந்த முனையம் நிறுவப்பட உள்ளதாக தெரிகிறது.. இந்த நிறுவனத்திற்கான ஒப்பந்த காலம் 35 வருடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனம் இந்த திட்டத்தில் சுமார் ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை முதலீடு செய்துள்ளது. இங்கு சரக்குகளை ஏற்ற, இறக்க நவீனமயமாக்கப்பட்ட வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்க தனி உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
சரக்கு ரயில்கள்: இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, "அரக்கோணத்தில் புதிய சரக்கு முனையம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.. 2 முழுநீள சரக்கு ரயில்கள் நிற்பதற்கான வசதியுடன், சரக்குகளை கையாளுவதற்கு போதுமான தளங்கள், நெடுஞ்சாலைகள் இணைப்பு சாலை வசதிகள், அலுவலக கட்டடங்கள் உள்ளிட்ட வசதிகளோடு அமைக்கப்படும் இந்த சரக்கு முனையம், இன்னும் 3 மாதங்களில் மொத்த பணிகளும் முடிந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இந்த முனையத்தில் ஆண்டுதோறும் 10 லட்சம் டன் சரக்குகள் கையாள முடியும். ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்" என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சிறப்பு அம்சம்: அந்தவகையில், இந்த புதிய ரயில்வே முனையம் பயன்பாட்டிற்கு வரும்போது ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, சென்னை ரயில்வே கோட்டத்தின் இந்த சிறப்பு திட்டம் மூலம் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications