அரவக்குறிச்சி: செந்தில் பாலாஜியை வழிமறித்து உறுதிமொழி வாங்கிய பொதுமக்கள்- பரபரப்பு வீடியோ!
அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை பிரசாரத்தின் போது பொதுமக்கள் வழிமறித்து உறுதிமொழி கையெழுத்து கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் வழிமறித்து உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத மணல்குவாரிகளை மூடக் கோரி காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். நல்லகண்ணு, வைகோ உள்ளிட்ட பல தலைவர்களையும் அழைத்து வந்து காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களை முன்னெடுத்ததால் புகழூர் விஸ்வநாதன் உள்ளிட்டோரை மணல்குவாரி தாதாக்கள் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி நேற்று புகழூர் பகுதியில் பிரசாரம் செய்தார்.
அவரை வழிமறித்த காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர், பிரசாரத்தின் போது மணல்குவாரிகளை மூடுவதாக பேசுகிறீர்கள்... அதை செயல்படுத்துவேன் என இந்த உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து போட்டுவிட்டு போங்கள்... என கறாரா சொல்லியிருக்கின்றனர். இதை வீடியோவாகவும் பதிவு செய்தனர்.
இதனால் திகைத்துப் போன செந்தில் பாலாஜி வேறுவழியே இல்லாமல் அந்த படிவத்தில் கையெழுத்துப் போட்டார். அப்போது அதை வீடியோ எடுக்கவிடாமல் அதிமுகவினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications