இஎம்ஐ தாமதம்! ராணிப்பேட்டையில் இரவில் பெண்களிடம் அடாவடி செய்த பைனான்ஸ் ஊழியர்! அடுத்து நடந்த சம்பவம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் வாங்கிய கடனுக்கு 2 நாட்களாக இஎம்ஐ கட்டாததால், முத்தூட் பைனான்ஸ் நிறுவன ஊழியர் ஒருவர், பெண்ணின் வீட்டின் முன்பு 2 மணி நேரமாக நின்றதாகவும், கடனை செலுத்தும்படி ஆபாச வார்த்தையால் பெண்ணை திட்டியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
வங்கிகள், மைக்ரோ பைனான்ஸ் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடனுதவி அளிக்கின்றன. இந்த கடன்களை மாதம் தோறும் இ.எம்.ஐ முறையில் வசூலித்து வருகின்றன. கடன்களை ஒருவேளை வடிக்கையாளர்கள் செலுத்த தவறினால் தனியார் நிதி நிறுவனங்கள் கடுமையாக நடந்து கொள்வதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட திருப்பூரில், 3 மாதங்கள் வீட்டுக்கடன் தவணையை செலுத்தாததால் ஆத்திரம் அடைந்த பிரைமெல் கேப்பிடல் அன்டு பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் "வீடு கடனில் உள்ளது" என வாடிக்கையாளர் வீட்டின் சுவற்றில் பெயிண்ட்டால் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. கடனை செலுத்த தவறியதற்காக இப்படியா செய்வது என பலரும் விமர்சித்தனர்.
இந்த சம்பவம் நடந்து முடிந்த ஓரிரு நாட்களில் மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் ராணிப்பேட்டையில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:- ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக 67 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாக சொல்லப்படுகிறது. இவர் வாங்கிய கடனுக்கான தவணை தொகையை செலுத்த 2 நாள் தாமதம் ஆகிவிட்டதாம்.
இதனால், பெண்ணின் வீட்டிற்கு சென்ற முத்தூட் பைனான்ஸ் நிறுவன ஊழியர் தவணை தொகை செலுத்த கோரியிருக்கிறார். 6 மணியளவில் கடன் வாங்கிய பெண்ணின் வீட்டிற்கு சென்ற பைனான்ஸ் நிறுவன ஊழியர் கார்த்திகேயன் என்பவர், இரண்டு மணி நேரம் ஆகியும் வீட்டின் முன்னே நின்று தவணை தொகை செலுத்தாதது தொடர்பாக கேட்டதாக சொல்லப்படுகிறது.
இரவு நேரம் ஆகியும் வீட்டின் முன்னே நின்று கொண்டு செல்ல மறுத்ததோடு, வீட்டில் இருந்த பெண்களை ஒருமையில் பேசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. இதையடுத்து அங்கு வந்த போலீசார், நிதி நிறுவன ஊழியரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து பணம் தரவில்லை என்பதற்காக ஒரு வீட்டின் முன்பாக இரண்டு மணி நேரம் நிற்கலாமா? என அந்த ஊழியரை எச்சரித்து போலீசார் அனுப்பினர்.
நிதி நிறுவன ஊழியர், கடன் வாங்கிய பெண் மற்றும் அவரது மாமியாரை நிதி நிறுவன ஊழியர் ஒருமையில் பேசி திட்டும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 2 நாட்களாக இஎம்ஐ கட்டவில்லை என்பதற்காக இரவு நேரத்தில் பெண்ணின் வீட்டின் முன்பு நிற்பது சரியில்லை என்று நெட்டிசன்கள் கூறும் கருத்தாக உள்ளது. இதில் உங்களுடைய கருத்து என்ன என்பதையும் இங்கே கமெண்ட் செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications