நடிகர் "நம்பியார்" கிட்ட.. அதைவிடுங்க..பாஜக சொன்னதுமே அதிரும் எடப்பாடி பழனிசாமி.. பலே டிடிவி தினகரன்
சென்னை: நேற்றைய தினம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு பேட்டி தந்துள்ளார்.. இந்த பேட்டி மிகுந்த முக்கியத்துவத்தை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது. என்ன காரணம்?
புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு டிடிவி தினகரன் பேட்டி தந்தார்.. அப்போது, திமுக குறித்து காட்டமான கருத்துக்களை கூறினார்.
சபரீசன்: "ஓபிஎஸ் - சபரீசன் சந்திப்பு இயல்பானது. ஓ.பன்னீர் செல்வம், சபரீசன் சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு என்றுதான் நான் பார்க்கிறேன். இதில், வேறு உள்நோக்கம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. அதிமுக பொதுச்செயலாளருக்கு நாம் அறிவுரை சொல்ல முடியாது. மக்கள் தான் சரியான அறிவுரையை கொடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. வரும் நவம்பர் மற்றும் டிசம்பருக்குள் அமமுக நாடாளுமன்ற தேர்தல் குறித்த தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்" என்பது உட்பட பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார்.

வழக்கமாக, திமுக எதிர்ப்பு என்ற விஷயத்தில் உறுதியாக இருப்பவர் தினகரன்.. அதேசமயம், எடப்பாடி பழனிசாமியை சில காலம் விமர்சிக்காமலேயே இருந்தார்.. ஆனால், ஓபிஎஸ் விவகாரம் தலைதூக்கியதுமே, காட்டமாக விமர்சித்தார்.. "எம்ஜிஆர் கையில் இருந்த இரட்டை இலை நம்பியார் கைக்கு போய்விட்டது" என்பது முதல் பச்சை துரோகம் பழனிசாமி வரை லிஸ்ட் போட்டு தாக்கி பேசினார் தினகரன்.
பாஜக கூட்டணி: ஆனால் நேற்றைய தினம், எடப்பாடியை விமர்சித்திருந்த நிலையில். முன்புபோல் பெரிதாக எடப்பாடியை விமர்சிக்கவில்லை.. எடப்பாடி ஆட்சியைவிட திமுக ஆட்சி மோசமாக இருப்பதுபோலவே அவரது பேச்சும் அமைந்திருந்தது.. தினகரனின் இந்த திடீர் ஜெர்க் பலரது புருவத்தையும் உயர்த்தி வருகிறது.எடப்பாடியை காட்டமாக விமர்சிக்காததற்கு, ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.. எப்படியும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க போகிறது.. எப்படியும் பாஜக தங்களையும் கைவிடாது என்பதே தினகரனின் பெருத்த நம்பிக்கையாகவும் இருக்கிறதாம். தென்மாநிலங்களில் வலுவான வாக்கு சதவீதத்தை தினகரன் கையில் வைத்துள்ள நிலையில், இவைகளை பாஜகவும் லேசில் நழுவ விடாது என்கிறார்கள்..
எடப்பாடி பழனிசாமி: அதுவும் இல்லாமல் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே, பலம்பொருந்திய திமுகவை வீழ்த்த முடியும் என்பதையும் பாஜக போலவே அமமுகவும் அறியாமல் இல்லை.. இதன்காரணமாகவே, திமுக எதிர்ப்பு என்ற விஷயத்தில் மிக தீவிரத்தையும், எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பதில், லேசான மென்மையையும் கையில் எடுக்க போகிறாராம்.

இதில் ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, ஏற்கனவே அவருக்கான ஆதரவை பல வகைகளில் தினகரன் தெரிவித்து வருகிறார்.. அவ்வளவு ஏன், சபரீசன் - ஓபிஎஸ்ஸை சந்திப்பை பலரும் விமர்சித்து வரும்நிலையில், இதற்கும், பூசி மெழுகியவாறே தினகரன் பதிலளித்திருந்ததும் பலரது கவனத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பாஜகவை பொறுத்தவரை, அதிக கண்டிப்பு, அதிக ஆதரவு என்றில்லாமல், கடந்த ஒருவருட காலமாகவே, நடுநிலைப்பாட்டை தினகரன் கடைப்பிடித்து வருகிறார்.. காரணம், பாஜகவை அதிகமாக ஆதரித்தால், சிறுபான்மையினரின் ஓட்டுக்களை இழக்க நேரிடும் என்பதையும் தினகரன் அறியாமல் இல்லை..
படுஜாக்கிரதை: எப்போதுமே தமிழக அரசியலில், பக்குவமும், நிதானமும், முதிர்ச்சியும் நிறைந்த தலைவராகவே தினகரன் கருதப்பட்டு வரும்நிலையில், எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், அதிமுக, ஓபிஎஸ், பாஜக போன்ற கட்சிகளை கவனமுடன் டீல் செய்து வருவதாக சொல்கிறார்கள்.. அதாவது, வம்பிலும் சிக்கி கொள்ளாமல், வலையிலும் விழுந்துவிடாமல், படுஜாக்கிரதையுடன் தினகரனின் காய்நகர்த்தல் நகர்ந்து நகர்ந்து வருகிறதாம்..

இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை அதிமுகவிடம் பாஜக கேட்டு வருகிறதாம்.. அந்த 20 தொகுதிகளில், 13 தொகுதிகளில் பாஜகவே நேரடியாக போட்டியிடுவதுடன், மற்ற 7 தொகுதிகளை, ஓபிஎஸ் அணி + அமமுக டிடிவி தினகரன், தமாகா ஜிகே வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர் போன்றோருக்குதான் அந்த தொகுதிகளை வழங்கவும் கணக்கு போட்டு வருகிறதாம்.
கிளைமேக்ஸ்: ஆனால், தினகரனும், ஓபிஎஸ்ஸூம், அதிமுகவுக்குள் கூடவே கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பிடிவாதம் காட்டிவரும்நிலையில், அவர்களுக்கும் சீட் ஒதுக்க பாஜக திட்டமிட்டு வருவது, எடப்பாடிக்கே சற்று அதிர்ச்சிதானாம். ஆனால், இதுவரை பாஜகவின் வியூகங்களுக்கு எடப்பாடி பழனிசாமி எந்த பதிலையும் சொல்லவில்லையாம்.. கூட்டணி விஷயத்தில் எடப்பாடி என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை. தினகரன் என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications