கம்பம் மக்களை கதி கலங்க வைத்த அரி கொம்பன்.. முண்டந்துறை வனப்பகுதியில் விடப்பட்டது
நெல்லை: கேரளா மற்றும் தேனி மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த அரி கொம்பன் யானை களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் முண்டந்துறை வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கம்பீரமாக காட்டு யானை ஒன்று உலா வந்தது. அரி கொம்பன் என்று இந்த யானையை மக்கள் அழைத்து வந்தனர். சின்னக்கானல் சாந்தம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த யானை சுற்றிய போது ரேஷன் கடைகளை உடைத்து அங்கிருந்த அரிசியை சாப்பிட்டு வந்தது.

இந்த யானையை அரிக் கொம்பன் என்று அப்பகுதி மக்கள் அழைத்தனர். தமிழ்நாட்டில் இந்த யானையை அரிசி கொம்பன் என்று மக்கள் அழைத்தனர். இடுக்கி மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த இந்த அரி கொம்பன் யானை கடந்த ஏப்ரல் மாதம் தமிழக கேரள எல்லையில் உள்ள பெரியார் புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்டது.
யானையின் நடமாட்டத்தை கண்டறிய ரேடியோ காலர் ஒன்றும் பொருத்தப்பட்டு இருந்தது. கேரள வனப்பகுதிக்குள் சுற்றி திரிந்த அரி கொம்பன் தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைத்தது. கடந்த 27 ஆம் தேதி கம்பம் நகருக்குள் புகுந்த இந்த யானை, அங்குள்ள மக்களை அச்சத்தில் உறைய வைத்தத்து.
கம்பம் நகர வீதிகளில் வலம் வந்த யானையை பார்த்து மக்கள் ஓட்டம் பிடித்தனர். பொதுமக்களை அச்சுறுத்திய அரி கொம்பனை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி, ஆனைமலை, டாப்சிலிப் பகுதிகளில் இருந்து 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால் அரிக்கொம்பன் யானை, வனப்பகுதிக்குள் செல்லாமல் சண்முகாநதி அணை பகுதிக்கு வந்தது. கடந்த சில நாட்களாக சண்முகா அணை நதி பக்கம் உலா வந்த இந்த யானை, நேற்று முன் தினம் நள்ளிரவு சின்னஓவுலாபுரம் பகுதிக்கு வந்தது. அப்போது யானைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் அங்குள்ள தனியார் தோட்டத்திற்குள் சென்ற யானையை கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.

இதையடுத்து யானைகளை கொண்டு செல்லும் பிரத்யேக லாரியில் அரி கொம்பனை ஏற்றி கொண்டு சென்றனர். லாரியின் முன்னும் பின்னும் கார், ஜீப்களில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சென்றனர். அரி கொம்பன் யானை லாரியில் கொண்டு செல்வதை மக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தனர். பலர் செல்போனில் படம் எடுத்ததையும் பார்க்க முடிந்தது.
இதைத்தொடர்ந்து அந்த யானை, களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் முண்டந்துறை பகுதியில் யானை விடப்பட்டுள்ளது. முன்னதாக யானையை முண்டந்துறை பகுதியில் விடுவதற்கு அருகாமையில் உள்ள மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. யானையை விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications