“ஊரே வரும்னு நினைச்சோம்… ஆனா, ஒரு ஈ,காக்கா கூட வரலை” – சோகமாய் முடிந்த கருவுடைச்சேரி தேர்தல்
அரியலூர்: அரியலூர் அருகே ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்கள் வழிமேல் விழிவைத்து வாக்காளர்களுக்காக காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் கருவுடைசேரியில் மக்கள் ஒட்டு மொத்தமாக தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் அங்கு உள்ள வாக்கு சாவடியில் இது வரை ஒரு வாக்குகூட பதிவாகவில்லை.
அரியலூர் ஒன்றியம் மேல கருப்பூர் ஊராட்சியில் கருவுடைசேரி கிராமம் உள்ளது. இங்கு ஆண் வாக்காளர்கள் 475 பேரும் பெண் வாக்காளர்கள் 460 பேரும் மொத்தம் 935 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த ஊரில் உள்ள புறம்போக்கு நிலம் 4 ஏக்கரை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து தனது குடும்பத்தினர் பெயரில் பட்டா போட்டு விட்டதாகவும், அதனை மீட்டு தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து கருவுடைசேரி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்து வந்தனர்.
ஆனால் இதுவரை நிலத்தை மீட்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் தேர்தலை புறக்கணிக்க இக்கிராம மக்கள் முடிவு செய்தனர்.
இதன்படி கருவுடைசேரி கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடிக்கு இன்று காலை முதல் யாரும் வாக்களிக்க செல்லவில்லை. இதனால் இன்று மதியம் 1 மணிக்கு மேலும் கூட இந்த வாக்குசாவடியில் ஒரு வாக்குகூட பதிவாகவில்லை.
இந்த வாக்குச்சாவடிக்கு பணிக்கு வந்த தேர்தல் அலுவலர்கள் ஒருவராவது வாக்களிக்க வரமாட்டார்களா என ஏக்கத்துடன் வாக்குச் சாவடிக்குள் அமர்ந்திருந்தனர். ஒட்டு மொத்தமாக கிராமமே தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.தேர்தல் முடியும் தருவாயின் கடைசி நிமிடத்தில் கூட யாரும் வரவில்லை வாக்குப்பதிவு செய்ய என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications