எந்திரன் கதை திருட்டு வழக்கு: 6 ஆண்டுகாலமாக இழுத்தடிக்கும் இயக்குநர் சங்கர், கலாநிதி மாறன்!
சென்னை: எந்திரன் படத்தின் கதை தம்முடையது என்றும் தமது கதையை இயக்குநர் சங்கர் திருடி படமாக்கியுள்ளார் என்றும் மூத்த பத்திரிகையாளரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு 6 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் ஒவ்வொரு விசாரணையின் போதும் வாய்தா வாங்குவதை இயக்குநர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோர் தொடர் கதையாக வைத்திருக்கிறார்களாம்.
தம்முடைய கதை திருடப்பட்டதாக கூறி இயக்குநர் சங்கர், கலாநிதி மாறனுக்கு எதிராக தமிழ்நாடன் நீதிமன்றப் படிகளேறினார். ஆனால் இந்த வழக்கின் ஒவ்வொரு விசாரணணக்கும் தமிழ்நாடன் மட்டுமே ஆஜராகி வருகிறார்.

இயக்குநர் சங்கர், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பு ஒவ்வொரு விசாரணையின் போதும் வாய்தா வாங்கி வழக்கை தள்ளிப் போடுவதையே வாடிக்கையாக வைத்து வருகிறார்களாம். இது தொடர்பாக தமிழ்நாடன் கூறுகையில், 6 ஆண்டுகாலமாக இந்த வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். லஞ்சம் வாங்குவதை கண்டித்தும் ஊழல் செய்வதை எதிர்த்தும் இந்தியன் போன்ற படங்களில் நமக்கு பாடம் போதிக்கிறார் இயக்குநர் சங்கர்.
ஆனால் இந்த வழக்கை நேர்மையாக எதிர்கொள்ளாமல் இருப்பது ஏன்? நீதிக்கு மதிப்பளித்து உண்மையான ஜென்டில்மேனாக இயக்குநர் சங்கர் நடந்து கொள்ளட்டும் என்றார்.












Click it and Unblock the Notifications