அவதூறு வழக்கு: ஆஜராகாத விஜயகாந்துக்கு விழுப்புரம் கோர்ட் பிடிவாரண்ட்!
தமிழகம் முழுவதும் விஜயகாந்துக்கு எதிராக பல நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளது. இதில் சிலவற்றில் விஜயகாந்த் நேரில் ஆஜராகி வருகிறார். ஆஜராகாத நீதிமன்றங்கள் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கவும் செய்கின்றனர்.
இதேபோல் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் பேசிய விஜயகாந்த், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசினார் என்று ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 26-ந் தேதி மட்டும் விஜயகாந்த் நேரில் ஆஜராகி இருந்தார்.
பின்னர் நடைபெற்ற தொடர் விசாரணைகளின் போதும் விஜயகாந்த் ஆஜராகவில்லை. கடந்த 6-ந் தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போதும் விஜயகாந்த் ஆஜராகவில்லை. அப்போது அடுத்த விசாரணைக்கு விஜயகாந்த் வரவில்லை எனில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கிருஷ்ணமூர்த்தி எச்சரித்திருந்தார்.
இதனிடையே இன்று இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் அலுவல்கள் இருப்பதால் விஜயகாந்த் ஆஜராக இயலவில்லை என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 7-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.