மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டை: தென்மலை வனப்பகுதியில் பிடிப்பட்ட நபர் மன நோயாளியா?
செங்கோட்டை: தென்மலை வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையின் போது பிடிபட்ட ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த நபர் மனநோயாளியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே மாவோயிஸ்ட் நடமாட்டம் வனப் பகுதிகளில் உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அம்மாநில வனத்துறையும்,காவல்துறையும் வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டைகளை நடத்தினர்.அதில் யாரும் சிக்காத நிலையில் கடந்த மாதம் வயனாடுப் பகுதியில் மாவோயிஸ்டுக்கள் திடீர் தாக்குதல்களில் ஈடுப்பட்டனர். இதனைத்தொடர்ந்து மாவோயிஸ்டுக்கள் நடமாட்டம் உள்ளதையும், அவர்கள் வனப்பகுதியில் ஊடுருவியுள்ளதையும் அம்மாநில காவல்துறை உறுதி செய்தது.

இதனைத்தொடர்ந்து தமிழக - கேரளா எல்லைப் பகுதிகளையும் எல்லைகளை இணைக்கும் வனப் பகுதிகளையும் தீவிரமாக கண்காணிக்க இருமாநில காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்து அதற்க்கான ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி பொதுமக்களிடம் மர்மநபர்கள் நடமாட்டம் குறித்து தகவல்களை தங்களுக்கு தெரிவிக்கவும் தகவல்களை பரிமாறவும் இதற்காக வனப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களான காணியின மக்களை அழைத்து தனி ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தினர்.
இந்நிலையில் தமழக-கேரளா எல்லைப் பகுதியான அடர்ந்த வனப்பகுதியான தென்மலை செந்தூரணி வனப் பகுதியில் உள்ள "ஊமையாரு"என்றப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தபோது கடந்த 27 ஆம் தேதி மர்மமனிதன் ஒருவன் நடமாடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அவனைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவன் ஒடிசா மாநிலத்தை சார்ந்த ஜஸ்வந்த் பூசாரி என்பது தெரிய வந்தது. அவனை கைது செய்த வனத்துறையினர் 29 ஆம் தேதி புனலூர் வனத்துறை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நயனா முன் ஆஜர்படுத்தினர்.
அவன் பிடிப்பட்டப் பகுதியில் தொடர்ந்து சோதனை நடத்திய வனத்துறையினர் அங்கிருந்து பை ஒன்றைக் கைப்பற்றினர். அதில் ஒரு ஜெர்க்கின், சேலை, ஒரு சட்டை, உள்ளிட்டவை இருந்தன. இந்நிலையில் நீதிமன்றக் காவலில் இருந்த அவனை நேற்று (02.02.2015) தங்களது காவலுக்கு எடுத்து விசாரணை நடத்த புனலூர் வனத்துறை சார்பில் மனு செய்யப்பட்டது.
வனத்துறையின் மனுவை ஏற்ற நீதிமன்றம் அவனிடம் 7 நாட்கள் விசாரணை மேற்கொள்ள மாஜிஸ்திரேட் நயனா அனுமதி வழங்கினார். அதனைத்தொடர்ந்து வன அதிகாரி லக்ஷ்மி குழுவினர் அவனை தென்மலை செந்தூரணி வனத்துறை அலுவலகத்திற்கு 02.02.15.மாலை 4.30 மணியளவில் அழைத்து வந்தனர்.
பின்னர் கொல்லம் மாவட்ட தனிப்படை துணைக் கண்காணிப்பாளர்.ஜேக்கப்,நெல்லை மாவட்ட கியூ பிராஞ் துணைக் கண்காணிப்பாளர் சுகந்த பகவதி,இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன்,உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதுக் குறித்து செந்தூரணி வனத்துறை அதிகாரி லக்ஷ்மி கூறுகையில் பிடிப்பட்ட நபர் குறித்து அவன் வசித்த மாநில காவல்துறைக்கு தகவல் கொடுத்து விசாரணை நடத்தியதில் இவன் வீட்டை விட்டு வெளியேறி 5 வருடங்கள் ஆவதாகவும், மன நலம் பாதிக்கப்பட்டவன் போல் தெரிவதாகவும், அவனை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று அவன் மன நோயாளியா..? இல்லை நடிக்கிறான..?என்பதும் மருத்துவ முடிவுகள் வந்தப் பின்தான் மேலும் விபரங்கள் தெரியும், இருப்பினும் அவன் பிடிப்பட்ட பகுதிக்கு அழைத்து செல்லப்பட உள்ளதாகவும்,அவன் எப்படி அடர்ந்த வனப் பகுதிக்குள் வந்தான் என்றும் விசாரணை நடத்தப்பட உள்ளதக அவர் தெரிவித்தார்.
அவனிடம் நடக்கும் விசாரணைக்குப் பின்தான் பல்வேறு தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக வனத்துறை,மற்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. தென்மலை வனப் பகுதியில் இந்த மர்ம நபர் பிடிப்பட்டதைத்தொடர்ந்து தமிழக கேரளா எல்லைப் பகுதியில் தீவிர வாகன சோதனையை இரு மாநில போலீசாரும்,மதுவிலக்கு போலீசாரும், வனத்துறையும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications