சாட்சிகளை குறுக்கு விசாரணை... சசிகலா தரப்பின் கோரிக்கையை நிராகரித்தது ஆறுமுகசாமி கமிஷன்
ஜெயலலிதா மரண விவகாரத்தில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய சசிகலா தரப்பினர் முன்வைத்த கோரிக்கையை ஆறுமுகசாமி கமிஷன் நிராகரித்தது.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா மரண விவகாரத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் முன்வைத்த கோரிக்கையை ஆறுமுகசாமி நிராகரித்தார்.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.
அப்பல்லோ மருத்துவர்கள்
முன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராம் மோகன் ராவ் , அப்பல்லோ மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் என 20 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
ஆறுமுகசாமியிடமே கேள்வி கேட்ட சசி
இந்நிலையில் சசிகலாவிடம் விசாரணை நடத்த சம்மன் இமெயிலில் அனுப்பப்பட்டது. சம்மனுக்கு பதில் அளிக்க வேண்டுமென்றால் தன் மீது புகார் கொடுத்தவர் யார் என்பதை தனக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமியிடம் சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது.
மற்றொரு கோரிக்கை நிராகரிப்பு
அதற்கு ஆறுமுகசாமியும் ஒப்புக் கொண்டது. இந்நிலையில் அனைவரையும் விசாரித்த பின் கடைசியில் குறுக்கு விசாரணை செய்ய ஆறுமுகசாமியிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
20 பேரிடம் விசாரணை
அதை ஆறுமுகசாமி ஏற்க மறுத்துவிட்டார். அவர் கூறுகையில் அனைத்து சாட்சிகளையும் விசாரித்த பின் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க இயலாது. இதுவரை 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
வழக்கு முடிய 15 ஆண்டுகள்
அனைவரையும் விசாரித்த பின் கடைசியில் குறுக்கு விசாரணை செய்தால் வழக்கு முடிய 15 ஆண்டுகள் ஆகும். இனி வரும் நாட்களில் வேண்டுமானால் விசாரணைக்கு வருபவர்களை விசாரிக்கலாம் என்று நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.