பெருமையாக உணர்கிறேன்... அமெரிக்காவின் முதல் தமிழ் பெண் நீதிபதி ராஜேஸ்வரி பெருமிதம்
சென்னை: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிரிமினல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி தனது நியமனம் குறித்துப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் 43 வயதான ராஜேஸ்வரி. இவர் 13 வயதிலேயே பெற்றோருடன் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி பெண் நீதிபதி என்ற பெருமையை எட்டியுள்ளார்.
ரிச்மான்ட் கவுன்டி மாவட்ட அட்டர்னி அலுவலகத்தில் உதவி வழக்கறிஞராக இருந்து வந்த அவர் தற்போது நியூயார்க் நகர கிரிமினல் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஒரு இணையதளத்திற்கு அவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனது நியமனம் குறித்து பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார் ராஜேஸ்வரி. அவரது பேட்டியிலிருந்து....
கெளரவமாக உணர்கிறேன்
எனது நியமனத்தை கெளரவமாக உணர்கிறேன். நெகிழ்ச்சியுடன் உள்ளேன். ஒரு கனவு நனவாகியுள்ளது. நான் கற்பனை செய்ததை விட வேகமாக இது நி்றைவேறியுள்ளது.
இந்தியாவிலிருந்து வந்தவர்களுக்கு
இந்தியாவிலிருந்து வந்த என்னைப் போன்ற குடியேறிகளுக்கு இது மிகவும் பெரிய விஷயம், கெளரவமானது. என்னுடைய நியமனத்தை அறிவித்த மேயரிடம் நான் பேசும்போது, இது அமெரிக்க கனவு மட்டுமல்ல, என்னைப் போல தூர தேசத்திலிருந்து வந்துள்ள ஒவ்வொருவருக்கும் இது கனவு என்றேன்.
16 வருட வக்கீல் பணி
கடந்த 16 வருடமாக வக்கீலாகப் பணியாற்றியுள்ளார் ராஜேஸ்வரி. பல்வேறு முக்கிய வழக்குகளில் இவர் பணியாற்றியுள்ளார். புதிய பதவியின் மூலம் சமூகத்தில் நீதியை நிலைநாட்ட, இயலாதவர்களுக்கு உதவ தான் பாடுபடப் போவதாக கூறியுள்ளார்.
மறக்க முடியாத இந்தியாவின் பாரபட்சம்
இந்தியாவில் பெண்களையும், ஆண்களையும் சமமாக நடத்துவதில்லை என்பது ராஜேஸ்வரியின் வருத்தமாக உள்ளது. நான் சிறுமியாக இருந்தபோதே அந்த பாரபட்சத்தைப் பார்த்துள்ளேன். எனது இந்தியத் தோழிகள் பலரும் படிப்பை முடித்ததுமே திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்கள். அவர்களது கனவு வாழ்க்கையை அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை என்று கூறுகிறார் ராஜேஸ்வரி.
அமெரிக்காவிலும் வீட்டு வன்முறை
வக்கீலாகப் பணியாற்றியபோது, தெற்காசியர்கள் தொடர்பான வீட்டு வன்முறை வழக்குகளே தன்னிடம் அதிகமாக வந்ததாக கூறுகிறார் ராஜேஸ்வரி. பெரும்பாலான வீட்டு வன்முறை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் தெற்காசியர்கள் மற்றும் இலங்கையர்களாகவே உள்ளனர் என்கிறார் ராஜேஸ்வரி.
2 இந்திய நீதிபதிகள்
தற்போது அமெரிக்க சிவில் கோர்ட் நீதிமன்றங்களில் 2 ஆண் நீதிபதிகள் உள்ளனர். ஒருவர் ஜெயமாதவன். இன்னொருவர் அனில் சிங். இருவருமே நியூயார்க் கோர்ட்டுகளில் பணியாற்றுகின்றனறர்.
டான்ஸ் தெரிந்தவர்
ராஜேஸ்வரிக்கு பரதநாட்டியம், குச்சுப்புடி நடனம் நன்கு தெரியும். பல இந்திய நிகழ்ச்சிகளில் நடனமாடியுள்ளார். மேலும் பத்மாலயா டான்ஸ் அகாடமி என்ற நிறுவனத்தையும் வைத்துள்ளார். தனது தாயார் பத்மா ராமநாதன் பெயரில் இதை உருவாக்கினாராம் ராஜேஸ்வரி.