"வீட்டுக்கு போய் என்ன பதில் சொல்லுவேன்".. குற்றாலத்தில் சிறுவன் பலியான நிலையில் கதறி அழுத பெண்!
தென்காசி: குற்றாலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான நிலையில், "நான் வீட்டுக்கு போய் என்ன பதில் சொல்லுவேன்" என சிறுவனின் உறவினர் பெண் கதறிய பெண் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் கடந்த 3 நாட்களாக சிறிதளவு தண்ணீர் விழுந்த நிலையில், பழைய குற்றாலத்தில் நேற்று காலை முதல் தண்ணீர் சீராக விழுந்தது.

தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் நேற்று குற்றாலம் வருகை தந்த சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் பழைய குற்றாலம் நோக்கி படையெடுத்தனர். நேற்று மதிய நேரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பழைய குற்றாலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அருவியில் நீர் வரத்து அதிகமாகத் தொடங்கியது. சுதாரித்துக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் அருவியை விட்டு விலகி தள்ளி நின்றனர். அப்போது தண்ணீர் வரத்து மேலும் வேகம் எடுத்தது. இதனால் அங்கு நின்றிருந்த சுற்றுலா பயணிகள் படிக்கட்டு வழியாக வேகமாக ஓட்டம் பிடித்தனர்.
நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சிலர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு அருவி அருகில் உள்ள பள்ளமான ஆற்றுப்பகுதியில் தள்ளப்பட்டனர். அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளும், கடைக்காரர்களும் சேர்ந்து துரிதமாக செயல்பட்டு கயிறு மூலம் பள்ளத்தில் ஆற்றில் சிக்கியவர்களை மீட்டனர்.
அப்போது நெல்லை பாளையங்கோட்டை ராம் நகரைச் சேர்ந்த அஸ்வின் (17) என்பவரை காணவில்லை என்று அவரது மாமாவான தென்காசி மேலகரத்தை சேர்ந்த அருண் என்பவர் கூறினார். நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த குமார் என்பவரின் மகனான அஸ்வின், பிளஸ் 1 படித்து வந்தார். தற்போது கோடை விடுமுறை என்பதால் தென்காசியில் மேலகரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார்.
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழுந்த நிலையில் தனது மாமா அத்தை உள்ளிட்ட உறவினர்களுடன் அருவியில் குளிக்க வந்தார். வெள்ளம் அதிகரிப்பதை பார்த்து அவரது மாமா அருண், அஸ்வினின் கையை பிடித்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார். ஆனால் தண்ணீர் அதிகமாக வந்ததால் அருண் படிக்கட்டில் தவறி கீழே விழுந்தார்.
அப்போது அவரது கைப்பிடியில் இருந்து விலகி வெள்ள நீரில் அஸ்வின் அடித்துச் செல்லப்பட்டார். இதையடுத்து சிறுவன் நீரில் அடித்துச் செல்வதை பார்த்து கூச்சலிட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசாரும் விரைந்து வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து அப்பகுதியில் மாயமான மாணவன் அஸ்வினை தேடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், எஸ்.பி சுரேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.
தொடர்ந்து மீட்புப் படையினர் தேடிய நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அஸ்வின் அங்கிருந்து சுமார் அரை கி.மீ தொலைவில் மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த நிலையில், அச்சிறுவனின் உறவினர்கள், அப்பகுதியில் கதறி அழுதனர். அஸ்வினின் உறவினரான பெண் ஒருவர், "போங்க போங்கன்னு சொல்றீங்களே.. நான் வீட்டுக்கு போய் என்ன பதில் சொல்லுவேன்.." என தலையில் அடித்துக்கொண்டு கதறியது பார்ப்போரை கலங்க வைத்தது.
பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, நெல்லை மாணவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து மெயினருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அனைத்து அருவிகளிலும் போலீசார், தீயணைப்பு படையினர் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு நிறுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications