பல மனைவிகள்... கீதாஞ்சலி, மெர்சியா, வர்ஷா பெண் தோழிகளுடன் சொகுசு வாழ்க்கை... வேந்தர் மூவிஸ் மதன் கதை
காசியில் ஜலசமாதியாகப் போவதாக கூறி கடிதம் எழுதிவைத்து விட்டு போன வேந்தர் மூவிஸ் மதன் பெண் தோழிகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது.
சென்னை: 6 மாத தலைமறைவுக்குப் பின்னர் திருப்பூரில் தோழியின் வீட்டின் படுக்கை அறை பரணில் கைது செய்யப்பட்ட வேந்தர் மூவிஸ் மதன், போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அறித்துள்ளார். பணத்தை செலவு செய்தது எப்படி? தலைமறைவு வாழ்க்கையில் நடந்தது என்ன என்பது பற்றி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுத்து கமிஷன் மூலம் சம்பாதித்து கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்த மதன் திடீரென மாயமானார். சினிமா உலக வாழ்க்கை, அரசியல் என 44 வயதில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த மதன் திடீரென காசியில் ஜலசமாதியாகப் போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானார்.
எஸ்ஆர்எம் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட்டு வாங்கித் தருவதாக கூறி 123 பேரிடம் 84.24 கோடி மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் உரிமையாளர் மதன், பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மதனுக்கு கீதாஞ்சலி, மெர்சியா, வர்ஷா மட்டுமின்றி பல பெண் தோழிகள் உள்ளனர். இவர்கள் தான் கடந்த 179 நாட்களாக மதனுக்கு உதவி செய்து வந்துள்ளனர். போலீசார் வீடு, கார், உள்ளிட்ட சொத்துக்களை வாங்க மதனுக்கு பண உதவி செய்தது இவர்கள் 3 பேர் மட்டும் தானா, அல்லது வேறு யாராவது உள்ளனரா, அவருடைய பெண் தோழிகள், நண்பர்கள் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர், அவர் மோசடி செய்த பணத்தை யாரிடம் கொடுத்து வைத்துள்ளார் என்ற விபரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.
கீதாஞ்சலி, மெர்சியா, வர்ஷா மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். 2வது, 3வது மனைவிக்கு ஏராளமான பணம், வீடு, பண்ணைகள் வாங்கிக் கொடுத்துள்ளார். இதனால் அவர்கள் இருவரையும் கைது செய்வது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், மதனின் காதலிகளையும் கைது செய்வது குறித்தும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

பெண் தோழிகள் உதவி
கடந்த 6 மாதகாலமாக பெண் தோழிகளின் உதவியுடன்தான் மதன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். நட்பு மற்றும் தொழில் முறையில் கூட எந்த ஆணிடமும் மதன் உதவி கேட்கவில்லை என்பன உள்பட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. போலீசாருக்கு சவால்விட்டு தலைமறைவாக இருந்து வந்த மதனை 179 நாட்களுக்கு பின்னர், நேற்று முன்தினம் அதிகாலை திருப்பூரில் உள்ள அவரது பெண் தோழி வர்ஷா வீட்டில் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, மதன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீசில் வாக்குமூலம்
கைது செய்த உடன் போலீஸ் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் மதன். கடந்த ஆண்டு எஸ்ஆர்எம் வேந்தர் பச்சமுத்துவிடம் இருந்து என்னை பிரிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். என் மூலம் மருத்துவக் கல்லூரிக்கு சீட் வழங்கக் கூடாது என்றும் தெரிவித்தனர். கடந்த ஆண்டு பச்சமுத்துவின் தம்பி சீனிவாசன் எனக்கு எதிராக செயல்பட்டார். இதனால் வடபழனி சிம்ஸ் மருத்துவமனை அருகே அவரை ஆள் வைத்து வெட்டினேன். அவர் படுகாயமடைந்தார்.

சீட் கொடுக்க மறுத்த ரவி பச்சமுத்து
ரவிபச்சமுத்து கல்லூரி நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பித்ததும், என்னை முழுமையாக ஓரம் கட்டினார். கடந்த ஆண்டும் சீட் கிடைக்கும் என்று மாணவர்களிடம் பணம் வாங்கினேன். அதில் பாதி பணத்தைத்தான் நிர்வாகத்தில் கட்டினேன். இந்த ஆண்டு பணம் வாங்கினேன். பின்னர் கொஞ்ச பணத்தை நிர்வாகத்தில் கட்டினேன். மீதம் உள்ள பணத்தை நான் செலவு செய்தேன். அப்போதுதான் ரவிபச்சமுத்து, இந்த ஆண்டு சீட் உங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டார்.

ஹரித்துவாரில் தலைமறைவு
பச்சமுத்துவை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் முடியவில்லை. இதனால் நானும் தப்பிக்க வேண்டும், பச்சமுத்துவையும் மாட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக திட்டம் போட்டேன். போலீசாரிடம் இருந்து தப்பிக்க கீதாஞ்சலியுடன் ஹரித்துவார் தப்பி சென்றேன். அப்போது அவரது உறவினரை போலீசார் பிடித்து விசாரிப்பது தெரிய வந்ததால் கீதாஞ்சலியை தமிழகத்திற்கு அனுப்பினேன்.

கார், பண்ணை வீடு
தமிழகத்துக்கு வந்த கீதாஞ்சலி, சென்னையில் இருந்தபடியே பணம் உள்பட அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். பின்னர் ஹரித்துவாரில் போலி ஆவணங்கள் மூலம் 60 லட்சத்துக்கு கார் வாங்கினேன். 10 ஏக்கரில் பண்ணை வீட்டுடன் இடம் வாங்கி வைத்துள்ளேன். பின்னர் புனேவில் சிறிது காலம் தங்கியிருந்தேன். மீண்டும் ஹரித்துவாரில் தங்கியிருந்தேன். போலீசார் கீதாஞ்சலியை பிடித்து விசாரித்த தகவல் எனக்கு கிடைத்ததும் அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டேன். பின்னர் சேகரிடமும் பேசாமல் இருந்தேன்.

வர்ஷா உடன் தொடர்பு
என்னுடைய 2வது மனைவியின் உறவினர்தான் திருப்பூர் திருமுருகன் பூண்டியில் உள்ள வர்ஷா. இவரது கணவர் விவாகரத்து பெற்றுவிட்டார். வர்ஷாவுக்கு 2 குழந்தைகள் உள்ளன. அவரை எனக்கு 2 ஆண்டுகளாக தெரியும். அவரை ஹரித்துவாருக்கு வரவழைத்தேன். பின்னர் பல இடங்களுக்கும் சுற்றித் திரிந்தோம்.

திருப்பூரில் தலைமறைவு
வர்ஷாவை திருமணம் செய்யாமல் மோதிரம் மாற்றிக் கொண்டேன். பின்னர் கோவா சென்று தேனிலவு கொண்டாடினோம். அதன்பின் திருப்பூர் திருமுருகன் பூண்டியில் அவருக்கு வீடு வாங்கிக் கொடுத்தேன். கார் வாங்கிக் கொடுத்தேன். பின்னர் 2 பேரும் தீபாவளி நேரத்தில் திருப்பூர் சென்றோம். அவரது வீட்டில்தான் வசித்து வந்தேன். வர்ஷாவின் மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக வீட்டில் எப்போதும் நான் பெண் போல நைட்டிதான் அணிந்திருப்பேன். வீட்டுப் பரணில் ஒளிந்து வாழ்ந்தேன்.

கைது செய்த போலீஸ்
நான் நினைத்தது போல, போலீசார் சேகரைப் பிடித்து விசாரித்துள்ளனர். அவர் 2 நாட்களுக்கு முன் எனக்கு மெசேஜ் அனுப்பினார். அதற்கு நான் ஹரித்துவாரில் இருப்பதாக தெரிவித்தேன். போலீசார் சேகருடன் ஹரித்துவார் சென்றனர். அங்கு நான் இல்லாததால் மீண்டும் மெசேஜ் கொடுத்தனர். அப்போது என் செல்போன் திருப்பூரில் இருப்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். போலீசார் வந்து கதவை தட்டியதும் படுக்கை அறையில் இருந்து ஓடி, பரணில் ரகசிய அறையில் நைட்டியுடன் ஒளிந்து கொண்டேன். போலீசார் வந்து தேடியபோது நான் கிடைக்கவில்லை.

காட்டிக்கொடுத்த வர்ஷா
படுக்கை அறையில் இருந்த என் செல்போனை போலீசார் கைப்பற்றினர். நான் பிடிபட்ட அன்று காலை வரை வாட்ஸ் அப்பில் இருந்ததை உறுதி செய்து கொண்டு, நான் அந்த வீட்டில்தான் மறைந்திருக்கிறேன் என்று உறுதிப்படுத்திக் கொண்டு, வர்ஷாவிடம் துருவி துருவி விசாரித்தனர். அதில் அவர் உண்மையை போட்டு உடைத்து விட்டார். இதனால் போலீசார் பரணில் உள்ள கதவை தட்டினர். பின்னர் போலீசார் பலகையை உடைத்து கைது செய்தனர். மாணவர்களிடம் வசூலித்த பணத்தில் ஊர் ஊராக காதலிகளுடன் சுற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார் மதன்.












Click it and Unblock the Notifications