சட்டசபையில் முதல்வர் என்னைப்பார்த்து சிரித்து விட வேண்டாம் - ஸ்டாலின்
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: தற்போது அமைந்துள்ள ஆட்சி மக்களுக்கு விரோதமான ஆட்சி என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றால் சட்டசபையில் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளா் சசிகலா சமீபத்தில் பேட்டியளித்த போது, எதிர்கட்சித்தலைவரும் முதல்வரும் சட்டசபையில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர், சிரித்துக்கொண்டனர் இதன் மூலம் அவர் அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறினார்.
சட்டசபையில் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டதற்கு பதவி பறிக்கப்பட்டது. இதேபோல புதிய முதல்வருக்கும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கையாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

சிரிப்புதான் வித்தியாசம்
இதற்கு பதில் சொன்ன ஓ.பன்னீர் செல்வம், மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உள்ள வித்தியாசம் சிரிப்புதான். மனிதர்கள்தான் சிரிப்பார்கள். மிருகங்களுக்கு சிரிக்கத் தெரியாது என்று கூறினார். 10 நாட்கள் நடந்த அரசியல் கலவரங்களுக்குப் பிறகு நேற்று புதிய அமைச்சரவை அமைந்துள்ளது. சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுள்ளார்.

மக்கள் விரோத ஆட்சி
இது குறித்து சென்னை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது அமைந்துள்ள ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் முதல்வர் பதவியில் அவர் நீடிப்பார் என்றார்.

ஹேட்ரிக் சாதனை
முன்னதாக ஸ்டாலின் விடுத்த அறிக்கையில் 2016ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகான ஒன்பது மாதங்களுக்குள் இதுவரை தமிழகம் காணாத வகையில் மூன்றாவது முதலமைச்சரை அதிமுக சட்டமன்றக் கட்சி தேர்வு செய்து ஒரு விநோதமான "ஹேட்ரிக்" சாதனை செய்திருக்கிறது.

மக்கள் நலன்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பெங்களூர் ஜெயிலுக்கு சென்று ஆலோசனைகள் கேட்டு ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப் பட்டுக் கொண்டு இருக்காமல், அரசியல் சட்டப்படி எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிக்கும் ரகசிய காப்பு பிரமாணத்திற்கும் பாதகம் வராமல், பெங்களூரிலும், இங்கேயும் உள்ள அதிகார மையங்களின் ஆசைக்கேற்ற "ஆட்டுவித்தலுக்கு" ஏற்றார் போல் ஆட்சியை நடத்தாமல், முதலமைச்சருக்குரிய பொறுப்புகளையும், கடமைகளையும் முழுதும் உணர்ந்து தமிழக மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஆட்சி நடத்திட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது என்னைப்பார்த்து முதல்வர் சிரிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications