ஜெயலலிதா சொத்துக்கள் சேஃப்.. இனிமேல்தான் இருக்கிறது பல சிக்கல்
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக தொடரப்பட்ட, வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனி நீதிமன்றம் 2014ம் ஆண்டு, செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதேபோல இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனைவை விசாரித்த கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி, நால்வரையும் குற்றமற்ற நிரபராதிகள் என கூறி தீர்ப்பு வழங்கினார். 2015ம் ஆண்டு, மே மாதம் 11ம் தேதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேல்முறையீடு
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசும், தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் விசாரித்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.
சரணடைய உத்தரவு
இந்த மூவரும், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டது ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதிகள், அவர்கள் மூவரையும் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டனர். இதையடுத்து பிப்ரவரி 15ம் தேதி அந்த மூவரும் சரண் அடைந்து, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வசூல் செய்வது
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பின்படி அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி தொகையை எப்படி வசூல் செய்வது என்பது குறித்து கேள்வி எழுப்பி, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது கர்நாடக அரசு.
மனுவில் வாதம்
ஒரு குற்ற வழக்கில் வாதங்கள் முடிந்து, தீர்ப்பு ஒத்திவைத்த பின்னர் ஒருவர் இறந்து விட்டால், அப்பீல் வழக்கு இல்லாமல் போய்விடும் என்பது இல்லை. வழங்கப்படுகிற தீர்ப்பு, அந்த நபர் உயிரோடு இருந்து வழங்கப்பட்டிருந்தால் என்ன வலிமையுடன் இருக்குமோ, அதே வலிமையுடன் இருக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது என்று அந்த மறு ஆய்வு மனுவில் கூறப்பட்டிருந்தது.
தள்ளுபடி
கர்நாடக அரசின் மறுஆய்வு மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் முன்னிலையில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் தங்கள் உத்தரவில் மாறுபாடு இல்லை என கூறி அவர்கள் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர். எனவே இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு அபராதம் கிடையாது. ஒருவேளை அபராதம் வசூலிக்க வேண்டிருந்திருக்குமானால், ஜெயலலிதாவின் சொத்துக்களை விற்பனை செய்து அரசு அந்த அபராதத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
வாரிசுகள்
சொத்துக்களை விற்க வேண்டாம் என்று விருப்பப்பட்டிருந்தால், ஜெயலலிதாவின் வாரிசுகளில் யாராவது, அந்த அபராத தொகையை செலுத்தியிருக்க வேண்டும். அப்படி செலுத்த நான் தயாராக இருக்கிறேன் என ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தனது சகோதரி தீபாவுடன் இணைந்து அதை கட்டிவிடுவேன் என அவர் கூறியிருந்தார்.
பத்திரமான சொத்துக்கள்
இப்போது சொத்துக்கள் அனைத்தும் சேப்டியாகிவிட்டன. எனவே ஜெயலலிதாவின் வாரிசுகள் இனி ஒரு பைசா செலவில்லாமல், கட்சியையும் கைப்பற்ற போட்டி போடுவாார்கள். ஜெயலலிதாவின் வாரிசு என தம்பட்டம் அடித்து இனிமேல் சொல்லிக்கொள்ள அச்சம் தேவையில்லை. பணம் செலவிட தேவையில்லை. எனவே இனிமேலல் தீபக், தீபா தீவிர அதிகாரப்போட்டியில் இறங்க கூடும். இதற்கு ஏற்கனவே அதிமுக அம்மா கட்சியிலுள்ளவர்களும், அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சியில் இருப்பவர்களும் விட்டுவிடப்போவதில்லை.
யாரிடம் போகும் சொத்து
சொத்துப்பிரச்சினை ஓய்ந்துவிட்டதால் இனிமேல் கச்சேரி களைகட்டும் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே இரண்டு கட்சிகளாக பிரிந்து கிடக்கும் கட்சிக்குள் மேலும் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜெயலலிதா தனது சொந்துக்களை யாருக்கும் உயில் எழுதி வைக்காதபட்சத்தில் அந்த சொத்துக்கள் அவரின் ரத்த வாரிசுகளுக்குத்தான் செல்ல வேண்டும். அப்படித்தான் சட்டம் உள்ளது. எனவே ரத்த வாரிசுகளிடம் ஜெயலலிதா சொத்துக்களை வாங்குவதற்கு சசிகலா தரப்பு பேரம் பேச வாய்ப்புள்ளது. இந்த பேரம் படியுமா, பூசல் வெடிக்குமா, அல்லது சொந்துதான் வேண்டும் என்று வாரிசுகள் கூறுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.