ஸ்ரீவைகுண்டம் சிவன் கோவிலில் சனிப்பெயர்ச்சியையொட்டி அதிருத்திர மஹா யாகம்
தூத்துக்குடி: தென்தமிழகத்தில் முதல் முறையாக ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் சிவன்கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை அதிருத்திர மஹா யாகம் நடக்கிறது.
வரும் 12.12.2014 அன்று இரவு 11.52மணிக்கு வாக்கிய பஞ்சாங்கத்தின் கணிதப்படி சனி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நெல்லை - தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவகைலாய ஆலயங்களில் சனி அம்சத்தில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை கைலாசநாதர் சிவன்கோவிலில் அதிருத்திரம் எனப்படும் மஹாயாகம் நடக்கிறது.
அதிருத்திர யாகம் எனப்படுவது 121 பேர் அமர்ந்து தினமும் 11 முறை பாராயணம் செய்து இதையே 11 நாட்கள் தொடர்ந்து செய்தால் அது அதிருத்திரம் ஆகும். அதிருத்திரம்-வேதி-12, அதிருத்திரத்தின் ஆவர்த்தி-14641, ஹோமகுண்டம்-12, யாகம்-1465 ஆவர்த்தி இதுவே அதிருத்திரம் வழிபாட்டு முறையாகும்.
6.12.2014 சனிக்கிழமை முதல் 12.12.2014 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் அதிருத்திர ஜெபயாகத்தின்போது சுவாமி கைலாசநாதர் ஆனந்த நிலையில் இருப்பார். இறைவனான அவர் ஆனந்த நிலையில் இருக்கும் வேளையில் அவரின் பக்தர்களான நாம் அவரை ஒருமனதுடன் மனம் உருகி முழுநம்பிக்கையுடன் வணங்கினால் வேண்டும் வரம் கிட்டும். நமது பிரார்த்தனைகளையும் அவர் நமக்கு நிறைவேற்றித்தருவார்.
இவ்வுலக வாழ்வை ஆளும் ஒரே பரம்பொருளான அருள்மிகு சிவபெருமானின் மாபெரும் கருணை அதிருத்திர ஜெய யாகத்தின் மூலமாக எளிதில் பெறலாம். இந்த யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு மனஅமைதி, கல்வி செல்வம், நீண்ட ஆயுள், பொருட்செல்வம், திருமண பாக்யம், குழந்தை பாக்யம், நோய் தீருதல், தொழில் விருத்தி, பகையின்மை மற்றும் குறைகள் தீர்ந்து சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
அத்துடன் நாடு செழித்திட நல்லமழைவளம் கிட்டும். உலகில் அமைதியும், சமாதானமும் ஏற்படுவதுடன், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் இல்லாமல் போகும். எனவே தென்தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரும் சிறப்பாக நடைபெறும் அதிருத்திர மஹாய யாகத்தில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம்.
இதுதொடர்பான விபரங்களுக்கு 94422 18071 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.