அட்டாக்பாண்டி தேடப்படும் குற்றவாளி- மதுரை மாவட்ட நீதிமன்றம் பிரகடனம்
மதுரை: திமுக நிர்வாகி பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு திமுக நிர்வாகியான அட்டாக்பாண்டி தேடப்படும் குற்றவாளியாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மதுரை டி.வி.எஸ்.நகரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி தி.மு.க. செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு நபர்களை போலீசார் கைது செய்தனர். சிலர் சரணடைந்தனர். இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக வில்லாபுரத்தை சேர்ந்த பாண்டி என்ற அட்டாக் பாண்டி சேர்க்கப்பட்டுள்ளார். இதுநாள் வரை அவர் தலைமறைவாக உள்ளார். பொட்டு சுரேஷ் கொலை வழக்கு மதுரை மாவட்ட 4-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அட்டாக்பாண்டி ஆஜராகாததால் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தும் ஆஜராகவில்லை. இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 22-ந் தேதி வர உள்ளது.
அதற்கு அவர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ அல்லது ஏதாவது ஒரு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்திலோ சரணடைய வேண்டும் எனவும், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தும் மாஜிஸ்திரேட்டு கோவிந்தராஜன் உத்தரவிட்டுள்ளார்.