ஆடி கார் ஐஸ்வர்யா முதல் அருண்விஜய் வரை...சென்னையை குலைநடுங்க வைக்கும் குடிஆசாமிகள்
சென்னை: குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டு சிலமணி நேரங்களில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த ஜூலை மாதம் குடித்து விட்டு ஆடிகாரை ஓட்டி வந்த ஐஸ்வர்யா, தொழிலாளி மீது மோதிய விபத்தில் அந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஐஸ்வர்யா, நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் கடந்த வாரம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
வீக் என்ட் பார்ட்டிகளில் குடித்து கும்மாளம் போடும் வசதிபடைத்த இளசுகள் அதே போதையுடன் காரை ஓட்டி வருவதால் அப்பாவி பொதுமக்கள் சாலைகளில் நடமாடவே அச்சமடைந்துள்ளனர்.

அப்பாவி தொழிலாளி பலி
திருவான்மியூர் காமராஜர் நகரை சேர்ந்த முனுசாமி என்ற கார்பென்டர், அதிகாலை நேரத்தில் எஸ்.ஆர்.பி. டூல்ஸ் பஸ் நிறுத்தம் அருகே, சாலையை கடக்க முயன்றார். அப்போது, டைடல் பார்க்கில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கிச்சென்ற கார், முனுசாமி மீது மோதியது. இந்த விபத்தில், முனுசாமி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

குடி போதையில் கார் ஓட்டிய ஐஸ்வர்யா
முனுசாமி மீது மோதிய காரை, பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அந்த காரில் 3 இளம் பெண்கள் இருந்தனர். அவர்களை போலீசாரிடம், பொது மக்கள் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், காரை ஓட்டி வந்தவரின் பெயர், ஐஸ்வர்யா என்றும், சேத்துப்பட்டை சேர்ந்த தொழில் அதிபர் வில்சனின் மகள் என்பதும் தெரியவந்தது.

விபத்தில் பலியான முனுசாமி
ஐஸ்வர்யா உடன் பயணம் செய்தவர்கள், அவரது தோழிகளான சுஷ்மா, பூர்ணிமா என்பதும் தெரிய வந்தது. இவர்கள் மூவரும், வீக் என்ட் கொண்டாட நட்சத்திர ஓட்டலுக்கு சென்று விட்டு, பின்னர் தியேட்டரில் படம் பார்த்து விட்டு மது போதையில் திரும்பிய போது, விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது.

புழல் சிறை
காரை ஓட்டிய ஐஸ்வர்யாவை, போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தோழிகள் இருவரையும், போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள். 40 நாட்கள் சிறையில் இருந்த ஐஸ்வர்யா பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அருண் விஜய்
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய், நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பினார்.

குடிபோதையில் மோதல்
அப்போது அளவுக்கு அதிகமாக குடித்திருந்த அவர், போதையிலேயே கார் ஓட்டி நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த போலீசாரின் வாகனத்தின் மீது மோதினார்.

கைதான அருண் விஜய்
இதில் அருண் விஜய்க்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும் போலீசார் வாகனங்களை சேதம் செய்ததற்காக அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

வீடு திரும்பிய அருண் விஜய்
இதையறிந்த அவரது தந்தை நடிகர் விஜயகுமார் உடனடியாக காவல் நிலையம் விரைந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து நடிகர் அருண் விஜய், தனது தந்தையுடன் வீடு திரும்பினார். அவர் அபராதத் தொகை செலுத்திய பின்னர், அருண் விஜயின் வாகனம் விடுவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வீக் என்ட் பார்ட்டிகள்
சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும், கிழக்குக் கடற்கரைச்சாலைகளில் உள்ள ரிசார்ட்களிலும் வார விடுமுறை நாள் பார்ட்டிகள் அதிகம் நடைபெறுகின்றன. இந்த பார்ட்டிகளில் பங்கேற்கும் பிரபலங்கள், வசதிபடைத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகள் குடித்து விட்டு போதையில் கார் ஓட்டி வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் உயிர் பயத்தில் உறைந்துள்ளனர் சென்னைவாசிகள்.

அபராதம் எவ்வளவு?
குடி போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என்கிறது மோட்டார் வாகன சட்டம். வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் 10 லட்சம் வரை இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அபராதங்களை அதிகரித்தால் மட்டுமே குடி போதையில் கார் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications