காவல் நிலையத்தில் பூட்ஸ் காலால் மிதித்து விசாரணை.. ரத்த வாந்தி.. ஆஸ்பத்திரியில் இளைஞர் மரணம்!
போலீசார் தாக்கி இளைஞர் இறந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
தென்காசி: "பூட்ஸ் காலால் வயிறு, முதுகில் மிதித்தனர்.. லத்தியால் அடித்து சித்ரவதை செய்தனர்" என்று உயிர் பிரிவதற்கு முன்பு, தனக்கு சிகிச்சை தந்த டாக்டர்களிடம் இளைஞர் ஒருவர் கண்ணீர் மல்க சொன்னதாக கூறப்படுகிறது.. விசாரணையின்போது போலீசார் தாக்கியதால்தான் இறந்துவிட்டதாக சொல்லி இளைஞரின் குடும்பத்தினர் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டது தென்காசியை அதிர வைத்து வருகிறது .
தென்காசியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்... இவரது மகன் குமரேசன்.. 25 வயதாகிறது.. இவர்களுடன் செந்தில் என்பவருக்கு இடப்பிரச்சினை தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. அது சம்பந்தமான புகாரும் போலீசில் தரப்பட்டுள்ளது.
அதனால் விசாரணைக்காக கடந்த மே 8-ம் தேதி குமரேசன் ஸ்டேஷன் சென்றுள்ளார்.. அப்போது குமரேசனை எஸ்ஐ சந்திரசேகர் லேசாக அடித்து எச்சரித்து விட்டு அனுப்பியதாக கூறப்படுகிறது. பிறகு மே 10-ம் தேதியன்று திரும்பவும் விசாரணைக்காக வீரகேரளம்புதூர் ஸ்டேஷன் சென்றார்.

பொய் வழக்கு
அப்போது குமரேசனை அங்கிருந்த போலீசார் மிக கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை வெளியில் சொல்லக்கூடாது என்றும், அப்படிச் சொன்னால் பொய் வழக்கு போடுவோம், உன் அப்பாவையும் அடிப்போம் என்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது.. அதனால் பயந்து போன குமரேசன் நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லவில்லை.

சுரண்டை
இந்நிலையில் கடந்த ஜுன் 10-ம் தேதி குமரேசன் ரத்த வாந்தி எடுத்துள்ளார்.. உடனடியாக குடும்பத்தினர் சுரண்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், ஜுன் 12-ம் தேதி மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். டாக்டர்கள் நடந்தது என்ன என்று கேட்டபோது, ஸ்டேஷனில் நடந்த கொடுமைகளை சொல்லி உள்ளார்.

கிட்னி
இதையடுத்து, குமரேசனின் கல்லீரலும், கிட்னியும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.. இதனால் அதிர்ச்சி அடைந்த குமரேசனின் அப்பா, தென்காசி எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளிடம் இதை பற்றி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஒருவரை விசாரணை செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

அதிர்ச்சி
இதனிடையே, 16 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த குமரேசன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்... அதிர்ச்சியும் ஆத்திரமமும் அடைந்த குடும்பத்தினரும், உறவினர்களும், கிராம மக்களும் குமரேசன் இறப்பிற்கு போலீசார்தான் காரணம் என்று சொல்லி விடிய விடிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்டு கொண்டே இருந்தனர்.
Recommended Video

விசாரணை
சாத்தான்குளம் சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், அடுத்த சம்பவம் நடந்துள்ளது.. எனினும் இது சம்பந்தமாக என்ன நடந்தது என்பதன் உண்மை தன்மை தெரியவில்லை.. போலீசார்தான் உரிய விசாரணை நடத்தி நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!












Click it and Unblock the Notifications