மாடு திருட உதவியதாக புகார்- மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
சேலம்: சேலத்தில் மாடு திருடியதற்கு உடந்தையாக இருந்தார் என்பதாக குற்றச்சாட்டு எழுந்த காரணத்தினால் ஆட்டோ டிரைவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள கிழக்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. விவசாயியான இவரது தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டப்பட்டிருந்த மாடுகளை மர்ம நபர் ஒருவர் பிடித்து செல்வதைப் பார்த்துள்ளார். உடனடியாக அவர் கூச்சல் போட்டதில் அக்கம் பக்கமிருந்த காட்டுக்காரர்கள் சேர்ந்து மாட்டை பிடித்துக்கொண்டு சென்ற வாலிபரை மடக்கி பிடித்து கட்டிவைத்து விட்டு வாழப்பாடி போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வாலிபர் குடிபோதையில் இருந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்ததில் அவர் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் மாடு திருடியதில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா என சுதாகரை விசாரித்தபோது அவர் வாழப்பாடி மன்னார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ உரிமையாளரும், டிரைவருமான சிவக்குமார் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஆட்டோவில் தன்னை இங்கே இறக்கி விட்டு மாடுகளை திருடி வரச்சொன்னதாக சிவக்குமார் போலீசாரிடம் கூறி உள்ளார்.
அப்போது அந்த இடத்துக்கு ஆட்டோவுடன் வந்த சிவக்குமாரும், சுதாகரும் இதுகுறித்து திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்பகுதியில் நின்ற போலீஸ்காரர் ஒருவரும், பொதுமக்களும் அவர்களை சமாதானப்படுத்தினர்.
அந்த நேரத்தில் விருத்தாசலத்தில் இருந்து சேலம் நோக்கி பயணிகள் ரயில் சென்றது. அப்போது, தனக்கு திருட்டு பட்டம் சுமத்தியதால் மனமுடைந்த ஆட்டோ டிரைவர் சிவக்குமார் கண்ணிமைக்கும் நேரத்தில் அருகில் உள்ள தண்டவாளம் பகுதிக்கு ஓடிச்சென்று ஓடும் ரயில் முன் பாய்ந்தார். இதில் சிவக்குமார் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். தற்கொலை செய்து கொண்ட சிவக்குமாருக்கு கண்மணி என்ற மனைவியும், சரண்யா என்ற மகளும், தனுஷ்குமார் என்ற மகனும் உள்ளனர்.
மாட்டு திருட்டு சம்பவம் தொடர்பாக வாழப்பாடி போலீசாரும், ஆட்டோ டிரைவர் தற்கொலை சம்பவம் தொடர்பாக சேலம் ரயில்வே போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மாடு திருடிய வழக்கில் சுதாகரை வாழப்பாடி போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.