ஆட்டோவில் ஏறி தற்கொலைக்கு ஆழமான ஆற்றைத் தேடிய முதிய தம்பதி.. மீட்டார் டிரைவர்
பவானி: நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு முதிய தம்பதி தற்கொலை செய்து கொள்வதற்காக பவானிக்கு வந்துள்ளனர். அங்கு ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்வதற்காக ஆட்டோவில் போயுள்ளனர். ஆனால் அவர்களின் நோக்கத்தை அறிந்த ஆட்டோ டிரைவர் அவர்களிடம் சாதுரியமாக பேசி அவர்களை தற்கொலையிலிருந்து மீட்டுள்ளார்.
நாமக்கல்லைச் சேர்ந்த 85 வயது முதியவரும், அவரது 65 வயது மனைவியும் பவானிக்கு சனிக்கிழமை வந்துள்ளனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினர். பின்னர் வெளியில் வந்த அவர்கள் ஒரு ஆட்டோ பிடித்தனர். அவர்களிடம் பவானி கூடுதறைக்குச் செல்லுமாறு கூறினர்.
டிரைவரும் அங்கு கூட்டிச் சென்றார். அங்கு இறங்கிய முதிய தம்பதி, மக்கள் குளிக்கும் இடத்திற்குப் போனார்கள். ஆனால் அப்போது தண்ணீர் வரத்து இல்லை. இதையடுத்து மீண்டும் ஆட்டோவுக்கே வந்த அவர்கள் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவிரி ஆற்றுக்குப் போகுமாறு கூறினர். ஆட்டோ அங்கு போனது.
ஆனால் அங்கும் தண்ணீர் அதிகம் இல்லை. பாறைதான் தெரிந்தது. இதையடுத்து தண்ணீர் எங்கு அதிகம் இருக்கும், ஆழமாக இருக்கும். அங்கு எங்களைக் கூட்டிக் கொண்டு போயேன் என்று டிரைவர் குருநாதனிடம் கூறினார்கள். அதைக் கேட்ட குருநாதனுக்கு சந்தேகம் தட்டியுள்ளது.
இதையடுத்து முதியவர்களிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்த அவர்களின் எண்ணத்தையும், மனதில் இருந்ததையும் கேட்டறிந்தார் குருநாதன். இரு வயதானவர்களும் தங்களது மன வேதனையை குருநாதனிடம் கூறியபடி வந்தனர். குருநாதன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே நேராக காவல் நிலையம் கூட்டி வந்து விட்டார்.
அங்கு காவல் நிலையத்தில் இருந்தவர்களிடம் முதியவர்களின் பரிதாபக் கதையைக் கூறி ஒப்படைத்தார்.
இதையடுத்து முதியவர்கள் இருவரையும் உட்கார வைத்து இன்ஸ்பெக்டர் சண்முகம் அவர்களிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போது 85 வயது முதியவர் கூறுகையில், நாமக்கல் துறையூர் சாலையில் லேத் பட்டறை நடத்தி வந்தோம். ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடித்து விட்டோம்.
இப்போது எங்களுக்கு வயதாகி விட்டது. பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை. எனவேதான் தற்கொலை செய்ய வந்தோம் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து போலீஸார், பெரியவரின் மகனுக்குத் தகவல் தெரிவித்த போலீஸார் அவர் வந்ததும் பெற்றோரை இப்படியா அலட்சியமாக பார்த்துக் கொள்வது, கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.