கலாமுக்காக.. மொட்டை அடித்த ஆட்டோ டிரைவர், இலவசமாக ஆட்டோ ஓட்டிய இன்னொரு டிரைவர்
தஞ்சாவூர்: மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பூதலூரில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தலைக்கு மொட்டை அடித்துள்ளார்.
அதேபோல இன்னொரு ஆட்டோ டிரைவர் இலவசமாக ஆட்டோ ஓட்டி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.
அப்துல் கலாமின் திடீர் மறைவு இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்களது மனவேதனையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தெரிவித்து வருகின்றனர்.
This kind hearted Auto Driver has decided to pay his #Respect to #DrAPJAbdulKalam by giving free rides for a day ! pic.twitter.com/u5vZqwAkFo
— T R B Rajaa (@TRBRajaa) July 28, 2015
அந்தவகையில், மக்களின் ஜனாதிபதியை தங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருத்தில் கொண்டு மொட்டை அடித்து தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கண்ணப்பன் (35).
நாச்சியார்பட்டியைச் சேர்ந்த கண்ணபிரான் பூதலூரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அப்துல் கலாம் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியைக் கேட்டுத் துடித்துப் போன கண்ணபிரான், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உடனடியாக மொட்டை அடித்துக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக கண்ணபிரான் கூறுகையில், "அப்துல் கலாம் இந்திய குடியரசு தலைவராக பொறுப்பேற்று மக்களின் காவலராக பணியாற்றிய போதிலிருந்து அவரை எனக்கு பிடிக்கும். மிகவும் எளிய நிலையில் இருந்து உயர் பதவிக்கு வந்தபோதும் தன்னை எந்தவிதத்திலும் மாற்றிக் கொள்ளாத தன்மையும் உழைப்புக்கு அஞ்சாத தன்மையும் என்னை கவர்ந்தது.
என்மகன் 8-ம் வகுப்பு படிக்கிறான் அவனிடமும் அப்துல் கலாம் பற்றி சொல்லி வளர்த்து வருகிறேன். அவருடைய இழப்பு என்னால் தாங்க இயலவில்லை. இதனால் மொட்டை அடித்துள்ளேன்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதேபோல இன்னொரு ஆட்டோ டிரைவர் நேற்று முழுவதும் இலவசமாக ஆட்டோ ஓட்டி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.