விபத்துக்களைக் குறைக்க... திண்டுக்கல் மாணவர்கள் கண்டுபிடித்த 'தானியங்கி முகப்பு விளக்கு'!
திண்டுக்கல்: விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் திண்டுக்கல் கல்லுாரி மாணவர்கள் வாகனங்களில் தானியங்கி முகப்பு விளக்கைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லூரி திண்டுக்கல்லில் இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் இறுதியாண்டு மின்னணுவியல் மற்றும் கருவியியல் மாணவர்கள் நான்கு பேர் சேர்ந்து தானியங்கி முகப்பு விளக்கு மற்றும் சோலார் டிரெட்மில் சைக்கிள் போன்றவற்றை மிகக்குறைந்த விலையில் உருவாக்கியுள்ளனர்.

சில நேரங்களில் எதிர், எதிரே வரும் வாகனங்களில் ஒரே சமயம் எரியும் முகப்பு விளக்குகளே, இரவு நேரங்களில் பல விபத்துகளுக்கு காரணமாகி விடுகிறது.
எனவே, இதற்கு தீர்வாக மாணவர்கள் ஜெரின் மத்யூ, கோபிநாத், பால்பாண்டி, ராமச்சந்திரன் ஆகியோர், உருவாக்கியுள்ள இந்த தானியங்கி முகப்பு விளக்கானது தானாகவே வெளிச்சத்தை குறைத்தும், அதிகரிக்கவும் செய்யும் திறன் கொண்டது.
தங்களது கண்டுபிடிப்பு குறித்து அம்மாணவர்கள் கூறுகையில், "எதிர் வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு அதிக வெளிச்சத்துடன் எரிந்தால், இக்கருவி பொருத்தப்பட்டுள்ள வாகனத்தின் முகப்பு விளக்கின் வெளிச்சம் தானாகவே குறைந்து விடும். இதனால் வாகனம் ஓட்டுபவருக்கு சாலை தெளிவாக தெரியும். இதற்கென 'சென்சார் கருவி', 'மைக்ரோ கண்ட்ரோலர்' உடன் பொருத்தப்பட்டுள்ளது.
எதிர் திசையில் சாலையை கடக்க ரோட்டோரம் யாரேனும் நின்று, ஓட்டுனர் கவனிக்கவில்லை என்றாலோ, வாகனம் இன்னொரு வாகனத்தை உரசி செல்லும் அளவிற்கு நெருங்கி சென்றாலோ தானாகவே வாகனத்தில் ஒலி எழுப்பும் 'பஸ்சர்' பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கருவியை கண்டுபிடிக்க ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவானது. இதை பொருத்துவதின் மூலம் இரவு நேரங்களில் பெருமளவு வாகன விபத்தை தடுக்கலாம்" எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications