விதிகள்படி ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும்... அரசு, டிஜிபிக்கு விலங்குகள் நல வாரியம் கடிதம்!
விதிகளின்படி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு விலங்குகள் நல வாரியம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை : ஜல்லிக்கட்டுக்காக மாற்றியமைத்த நெறிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குனருக்கு விலங்குகள் நல வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜனவரி 14 தொடங்கி 16 வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன, வீரர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கு ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.
இந்த ஆண்டு வடுதலாக ஒரு மணி நேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது விழாக் குழுவினருக்கும், கிராம மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக காவல்துறை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படக் கூடாது, அவற்றிற்கு காயம் ஏற்படக்கூடாது உள்ளிட்ட மாற்றியமைக்கப்பட்ட விதிகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக விழா நடைத்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு முன் கூட்டியே சுற்றறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் விலங்குகள் நல வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகளை முன்கூட்டியே விலங்குகள் நல வாரியத்திற்கு தெரியப்படுத்திவிட்டால் அதற்கு ஏற்ப அதிகாரிகள் குழுவை நியமித்து அந்தந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட வசதியாக இருக்கும் என்றும் விலங்குகள் நல வாரியம் கூறியுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு நடைபெறம் இடங்களில் ஆய்வு நடத்த 10 பேர் கொண்ட குழுவையும் விலங்குகள் நல வாரியம் நியமித்துள்ளது. இவர்கள் மாநில/மாவட்ட அதிகாரிகள் தரும் தகவல்களை பொறுத்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.