விடுதியில் வசதியே இல்லை: மத்திய குழுவிடம் ஆயுர்வேத கல்லூரி மாணவிகள் புகார்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் உள்ள விடுதியில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என்ற மாணவிகள் புகரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில், கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் முன்பு மத்திய குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். இதற்காக கல்லூரி தொடங்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் இருந்து மத்திய குழு நாகர்கோவில் வந்து ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து டாக்டர் ராஜாராம் தலைமையில் 3 பேர் கொண்ட குழு கோட்டார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக்கு வந்தது. அவர்கள் கல்லூரியின் வகுப்பறைகள், ஆய்வகங்கள், சோதனை கூடங்கள், மருந்து தயாரிக்கும் அறை, மாணவிகள் விடுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களை கல்லூரியின் முதல்வர் ராமகிருஷ்ணமாச்சாரியா ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்து சென்று அங்கு நடைபெறும் பணிகளை விளக்கினார்.
குழுவினர் கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கும் விடுதிக்கு சென்றபோது அங்கு தங்கியிருந்த மாணவிகள், தங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என கூறினர். மேலும் குடிநீர் வசதி சுத்தமாக இல்லை என்றும் கூறினர். இது பற்றி ஆய்வுக் குழுவினர் கல்லூரி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர். மாணவியருக்கு உரிய வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். பின்னர் கல்லூரியில் நடைபெறும் கட்டுமான பணிகளையும் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மத்திய ஆய்வு குழுவிடம் மாணவிகள் திடீரென புகார் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.