ஆடி கார் வைத்திருக்கிறேனா.. ரோட்டில் படுத்து பிச்சை எடுத்து தின்கிறோம்… அய்யாகண்ணு உருக்கம்
‘நான் ஆடி கார் வைத்திருக்கிறேன் என்று பாஜகவினர் சொல்லி வருகின்றனர். ரோட்டில் படுத்து பிச்சை எடுத்து தின்று வருகிறோம் நாங்கள்’ என அய்யாகண்ணு உருக்கமாகக் கூறியுள்ளார்.
சென்னை: விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் 22 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள் தமிழக விவசாயிகள்.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.
எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
100க்கும் மேற்பட்டோர்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 22 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பாஜகவிற்கு கண்டனம்
இந்நிலையில், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் இருந்து விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அய்யாகண்ணு பாஜகவினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை கடுமையாக கண்டித்தார். மேலும் அவர் கூறியதாவது:
பிச்சை
நாங்கள் டெல்லிக்கு வந்து அன்றாடம் பிச்சை எடுத்துதான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கான உணவை குருத்வாரில் இருந்து பெற்று உண்டு வருகிறோம். அதுமட்டுமல்லாமல் அன்பு உள்ளம் கொண்டோரும் எங்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
சாலையில் படுக்கை
நாங்கள் இங்கு வந்த நாளில் இருந்து சாலைகளில்தான் தங்கி இருக்கிறோம். ரோட்டிலேயே படுத்து, தூங்கி, போராடி வருகிறோம். எங்கள் போராட்டம் நிறைவேறும் வரை இப்படித்தான் இருப்போம்.
ஆடி காரா?
எங்களைப் பார்த்தால் ஆடி கார் வைத்திருப்பது போன்றா இருக்கிறது. அப்படி சொல்லி பாஜகவினர் எங்களை அவமானப்படுத்தி வருகின்றனர். எங்களையும் எங்களது போராட்டத்தையும் கொச்சைப்படுத்து பாஜகவினரின் எண்ணம் பலிக்காது என்று அய்யாகண்ணு திட்டவட்டமாகக் கூறினார்.