அமைச்சர் காலத்தில் பயன்படுத்திய பழைய லெட்டர் பேடை எடுத்து "தேங்க்ஸ்" சொன்ன அழகிரி!
மதுரை: தன்னுடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. ஆனால் அந்த கடிதம் எழுதிய லெட்டர் பேட்தான் கொஞ்சம் சிக்கலை உண்டுபண்ணியுள்ளது.
மு.க.அழகிரியின் 64 வது பிறந்தநாள் இன்று மதுரை குலுங்க குலுங்க கொண்டாடப்பட்டது. இத்தனை ஆண்டுகள் இருந்ததை விட இந்த ஆண்டு உற்சாகம் கொஞ்சம் குறைவுதான் என்றாலும், பால்குடம், முளைப்பாறி, நலத்திட்ட உதவிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை.

இத்தனை ஆண்டுகாலமாய் தான் வளர்த்துவிட்ட தன்னால் வளர்ந்த 75 சதவிகிதம் பேர் தன்னை விட்டு ஒதுங்கினாலும் 25 சதவிகிதம் பேர் அழகிரியின் பிறந்தநாளை உற்சாகமாகவே கொண்டாடினர்.
அவர்களுக்கு அழகிரி நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார்.
எனது உதிரத்திலும், உணர்விலும் அன்றும் இன்றும் இரண்டறக் கலந்துள்ள அன்பு உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்கள் என்றென்றும் நலமோடும் புகழோடும் வாழ, வளர எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
என்னுடைய சோதனைக்காலங்களிலும் கூட எனக்கு நங்கூரமாய் இன்றும் நட்போடு இருப்போரை நினைத்து பெருமைப்படுகிறேன். என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அழகிரி கூறியுள்ளார்.

அவர் நன்றி சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் அவர் கடிதம் எழுதிய லெட்டர்பேடுதான் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவர் உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக இருந்தபோது உபயோகப்படுத்திய லெட்டர் பேடினை பயன்படுத்தி நன்றி கடிதம் எழுதியுள்ளார் என்பதுதான் அவருக்கு சிக்கல்.












Click it and Unblock the Notifications