கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்து விட்டு வந்த பின்னர் சஸ்பெண்ட் ஆன மு.க.அழகிரி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி இன்று காலை அவரது கோபாலபுரம் வீட்டிற்குப் போய் சந்தித்து விட்டுத் திரும்பிய நிலையில் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திமுகவின் அசைக்க முடியாத முக்கியத் தூண்களில் ஒருவராாக இருந்த அழகிரி நீக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்து வந்த அழகிரி, இன்று காலைதான் கோபாலபுரம் வந்தார். கடந்த சில வாரங்களில் அவர் கருணா்நிதியைச் சந்தித்தது இது 3வது முறையாகும். குறிப்பாக அவரது ஆதரவாளர்களால் எழுந்த சர்ச்சைகளுக்குப் பின்னர் அவர் 3வது முறையாக கருணாநிதியைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பு முடிந்து திரும்பிய பின்னர் அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அழகிரியிடம், கருணாநிதியே சஸ்பெண்ட் குறித்து தெரிவித்திருக்கலாம் என்றும் தெரிகிறது.
அழகிரியின் நீக்கத்தால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரையில் உள்ள அழகிரி ஆதரவாளர்கள் பெரும் மெளனத்திலும், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்திலும் உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.