அந்தமான் படகு விபத்து.. மு.க.அழகிரி, விஜயகாந்த் இரங்கல்
சென்னை: அந்தமான் படகு விபத்தில் தமிழகத்தை் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மு.க.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அந்தமான் படகு விபத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
விஜயகாந்த் இரங்கல்
இதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில், அந்தமான் யூனியன் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றவர்கள் தனியார் சுற்றுலா படகு மூலம் அங்குள்ள ரோஸ் தீவிலிருந்து வடக்கு வளைகுடா பகுதியில் உள்ள தீவுக்கு கடலில் சென்றபோது, நடுக்கடலில் படகு கவிழ்ந்து, அதில் பயணம் செய்த சுமார் 46 பேரில் 32 பேர்கடலில் மூழ்கி இறந்துள்ளதாக தெரிகிறது.
அதில் தமிழ்நாட்டில் இருந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த 32 பேர் கொண்ட ஒரு குழுவினர் அந்த விபத்தில் சிக்கி, அதில் பெரும்பாலானவர்கள் இறந்துவிட்டார்கள் என்றும், பலர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்கள் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
சுற்றுலாத் தலங்களில் குறிப்பாக, நீர்நிலை சுற்றுலாக்களில் இதுபோன்ற விபத்துகள் முழுக்க, முழுக்க கவனக்குறைவாலும், அஜாக்கிரதையாலும்தான் நடைபெறுகிறது.
தனியார் மூலம் இயக்கப்படுகின்ற இதுபோன்ற படகுகளை அரசு தரப்பில் கண்காணிப்பதோ, அதற்கு சரியான விதிமுறைகளை வகுக்காமல் இருப்பதும்தான் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் விபத்து நடந்த பிறகு புலன்விசாரணை செய்வதும், கண்துடைப்பிற்காக ஒருசிலர் மீது நடவடிக்கை எடுப்பதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவது என்பதும் ஓரளவு ஆறுதல் அளிக்குமே தவிர, இழந்த உயிர்களை மீண்டும் பெற்றுத்தராது.
எனவே இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற விபத்துகள் நேராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளுகிறேன் என்று தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications