பாகுபலி -2 இண்டர்நெட்டில் ரிலீஸ்… படக்குழுவினர் அதிர்ச்சி
பாகுபலி 2 திரைப்படம் இணையதளத்தில் இன்று சட்டவிரோதமாக வெளியானது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: தமிழகத் திரையரங்குகளில் இன்று பாகுபலி - 2 வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், இணைய தளத்தில் படம் ரீலிஸ் ஆகிவிட்டது.
விநியோகிஸ்தர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவான படம் பாகுபலி. படத்தின் பிரம்மாண்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படம் வசூலிலும் சாதனை படைத்தது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வியுடன் முடிந்த பாகுபலி படத்திற்கு பதில் கூறும் வகையில் இரண்டாவது பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இன்று ரிலீஸ்
இந்நிலையில் பாகுபலி கன்குளுஷன் என்ற இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

முன்பதிவு
இதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்றன. படத்தைக் காண மக்கள் பெரும் ஆர்வத்தோடு காத்திருந்தனர். தமிழகத்தில் இன்று இந்தத் திரைப்படம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.

சிக்கல்
இந்நிலையில், பட விநியோகிஸ்தர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விநியோகிஸ்தர்கள் பாக்கி வைத்திருப்பதால், கியூப் மூலம் படத்தை பதிவேற்றவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கில் ரிலீஸ்
தமிழில் வெளியாகாதபோதும், சென்னையில் தெலுங்கு மொழியில் பாகுபலி-2 படம் வெளியானது. தமிழகம் முழுவதும் 650 திரையரங்குகளில் தமிழில் பாகுபலி-2 படம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. படம் வெளியாவதில் சிக்கல் நீடிப்பதால் தமிழ் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.

இண்டர்நெட்டில் ரிலீஸ்
இந்நிலையில், இணையதளத்தில் பாகுபலி 2 திரைப்படம் இன்று காலை சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது. இதனால் இண்டர்நெட்டில் படம் பார்ப்பவர்கள் குஷியாகி இருக்கிறார்கள். ஆனால் படக் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications