தயாநிதி மாறனும்.. 323 தொலைபேசி இணைப்புகளும்..! ஒரு பிளாஷ் பேக்
சென்னை: தயாநிதி மாறன் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது பிஎஸ்என்எல் நிர்வாகத்திடமிருந்து 323 இணைப்புகளை சட்டவிரோதமாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ பிடி இறுகத்தொடங்கியுள்ளது.
சன் தொலைகாட்சிக்கு முறைகேடாக நவீன தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த கெளதமன், சன் டி.வி. ஊழியர்கள் இருவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். இந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கருணாநிதியை சந்தித்து மாறன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

323 இணைப்புகள்
இந்த வழக்கு குறித்த விவரம் இதுதான்: தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தனது சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் டிவிக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பூமிக்கு அடியில் வயர்களை புதைத்து வைத்து இந்த இணைப்புகள் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

வழக்கு தொடர்ந்த குருமூர்த்தி
சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் தொடர்பாக பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது.

மாறன் மீது எப்.ஐ.ஆர்
அதன்படி தயாநிதி மாறன், 2007ல் பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த கே. பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி ஆகியோர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2011ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறார்கள். சன் தொலைக்காட்சியின் உயர் பதவிகளில் இருந்தவர்களிடமும் சிபிஐ விசாரித்து வந்தது.

மூவர் கைது
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த வி. கெளதமனை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் புதன்கிழமை இரவு கைது செய்தனர். அவருடன் சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ். கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ். ரவி ஆகியோரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வீட்டிலிருந்து சன்டிவிக்கு கனெக்ஷன்
சுமார் 323 சக்தி வாய்ந்த பி.எஸ்.என்.எல். இணைப்புகள் சென்னை போட் கிளப் பகுதியில் உள்ள தயாநிதி மாறன் வீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பின்னர், இந்த இணைப்புகள் சன் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு முறைகேடாக வழங்கப்பட்டன என்று குற்றம்சாட்டப்படுகிறது.

தரமான ஒளிபரப்புக்கு பிஎஸ்என்எல் இணைப்புகள்...
இந்த இணைப்புகள் சாதாரண இணைப்புகள் இல்லை. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தேவையான சக்தி வாய்ந்த இணைப்புகள் ஆகும். இந்த இணைப்புகளை முறைப்படி பெற வேண்டுமானால் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிவரும். இதனால், முறைகேடாக இந்த இணைப்புகள் சன் தொலைக்காட்சிக்கு பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது என்பதுதான் குற்றச்சாட்டு. இதுபோல முறைகேடாக தொலைபேசி இணைப்பை பயன்படுத்தியதால், அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications