ரஜினி மகள் வீட்டில் பணிப்பெண்.. வெளியில் பில்டிங் ஓனர்! நகை திருடிய வழக்கில் ஈஸ்வரிக்கு ஜாமின்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேஷ் ஆகியோருக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது. 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஐஸ்வர்யா புகாரளித்து இருந்த நிலையில், 50 சவரன் வரை ஈஸ்வரியிடம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா சென்னையில் உள்ள தனது வீட்டின் லாக்கரை கடந்த சில நாட்களுக்கு முன் திறந்து பார்த்தபோது பாரம்பரியம் மிக்க பழமையான தங்க நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் தனது வீட்டில் இருந்த சுமார் 60 சவரன் நகைகளை காணவில்லை என்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் தன்னுடைய வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து வழக்குப் பதிவு செய்த சென்னை தேனாம்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் அதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இறுதியில் ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோர் கூட்டு சேர்ந்து ஐஸ்வர்யா நகைகளை திருடியதாக போலீசார் உறுதி செய்தனர்.
இருவரையும் கைது போலீசார் நடத்திய விசாரணையில் ஈஸ்வரியின் வீட்டில்
நகை இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியபோது 100 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. ஐஸ்வர்யா தனது புகாரில் 60 சவரன் நகை மட்டுமே காணாமல் போய் இருந்ததாக புகார் அளித்து இருந்த நிலையில், கூடுதல் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து அவரை தொடர்புகொண்டு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் முழு கணக்கையும் கேட்டனர். அப்போதுதான் ஐஸ்வர்யா 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டதாக புதிய மனுவை வழங்கி அதிர்ச்சி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஈஸ்வரி நகைகளை திருடியதும் அதை வெங்கடேசன் விற்க உதவியதும் தெரியவந்தது. திருடிய நகைகளை விற்று சோழிங்கநல்லூரில் நிலம் வாங்கி வாடகைக்கு தங்கும் வீடுகளை கொண்ட கட்டிடம் ஒன்றை ஈஸ்வரி கட்டியது தெரியவந்தது. ஈஸ்வரியிடம் இருந்து 103 சவரன் நகை, 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், சுமார் ரூ.95 லட்சம் மதிப்புள்ள நில பத்திரம் போன்றவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
கடந்த சில நாட்களாக சிறையில் நீதிமன்ற காவலில் இருந்த இருவரையும் கடந்த மார்ச் 28 ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றம் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இந்த நிலையில், இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்குமாறு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications