அதெல்லாம் சரி, அப்பா பெயர் எங்கே?... ராதாவுக்கு கிடுக்கிப் பிடி போடும் பைசூல் வக்கீல்!
பைசூல் தன்னுடன் 6 வருடம் குடும்பம் நடத்தினார். பணத்தை மோசடி செய்து விட்டார். திருமணம் செய்ய மறுத்து விட்டார் என்று கூறி பணத்தைத் திரும்பப் பெற்றுத் தரக் கோரி போலீஸில் புகார் கொடுத்தார் நடிகை ராதா.
மேலும் இதுதொடர்பாக சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டிலும் அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இன்று இந்த வழக்கு நீதிபதி ஆதிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பைசூல் தரப்பில் வழக்கறிஞர்கள் கலைச்செல்வன், மார்க்கரெட் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணையின்போது ராதா தரப்பு வக்கீல் வாதிடுகையில், பைசூலுக்கு ஜாமீன் தரக்கூடாது. பைசூலால் ராதா கர்ப்பமாகியுள்ளார். அவரது கட்டாயத்தால் அபார்ஷன் செய்து விட்டார். அதுதொடர்பான ஆதாரங்கள் இதோ என்று ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.
இதையடுத்து குறுக்கிட்ட பைசூல் தரப்பு, அதெல்லாம் சரிதான். அதில் அப்பா பெயரே இல்லையே. பைசூல்தான் தந்தை என்றால் அப்பெயர் இருக்க வேண்டுமே என்று கிடுக்கிப்பிடி போட்டனர்.
இதே கேள்வியை நீதிபதி அரசு வக்கீலிடம் எழுப்பி விளக்கச் சொன்னார். அதற்கு அரசு வழக்கறிஞர், திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியதாக சொல்ல முடியாது. கற்பழிப்பு வழக்காகவும் எடுத்துக்கொள்ள முடியாது.
இப்போதைக்கு பணம் வாங்கியுள்ளதாகவும், அதை திருப்பி கொடுக்க வேண்டும் என்றே விவகாரம் உள்ளது. தீர விசாரித்த பிறகுதான் அரசு நடவடிக்கை எடுக்கும். முகாந்திரம் இருந்தால் வழக்கு தொடருவோம். பைசூலை கைது செய்யலாம். ஆகவே, அதுவரை பைசூலை கைது செய்ய அவசியமில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.