சிவகாசியில் பந்த்: உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று வைகோ பேச்சு
பட்டாசு தயாரிப்புக்கு பெயர் போன ஊர் சிவகாசி. குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் ஏராளமான பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பட்டாசு தொழிலை நம்பி சிவகாசியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சீனாவில் இருந்து பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுவதால் சிவகாசி பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பட்டாசு இறக்குமதியை தடுத்து நிறுத்த வேண்டும், மத்திய அரசு அண்மையில் கிட்டங்கி உரிம கட்டணத்தை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ. 4 லட்சமாக உயர்த்தியதை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 5ம் தேதி முதலே சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
இருப்பினும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சிவகாசியில் இன்று பந்த் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
சிவகாசி, திருத்தங்கல், நாராயணபுரம், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.
பந்தால் சிவகாசியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இன்று காலை 9 மணி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.