வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பணமில்லாமல் மூடப்பட்ட ஏடிஎம்கள்... பொதுமக்கள் அவதி
சென்னை: நேற்று நடைபெற்ற வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனைகள் பெரிதும் பாதிக்கப் பட்டன. பணமில்லாமல் பல ஏ.டி.எம்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.
சம்பள திருத்தத்தை மேற்கொள்வது, வங்கித் துறை சீர்த்திருத்தங்களை நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கி ஊழியர்களின் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அவர்களின் கோரிக்கைகள் குறித்து வங்கி ஊழியர்களின் சங்கங்களுக்கும், வங்கி அமைப்புகளுக்கும் இடையே கடந்த சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாததால் தோல்வி அடைந்தது. இதையடுத்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த வங்கி ஊழியர்கள் சங்கங்கள் முடிவு செய்தன.
அதன்படி, நேற்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சம் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்தத்தால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் பண பரிவர்த்தனைகள் பாதிக்கப் படும் அபாயம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில ஏடிஎம்களில் பணம் தீர்ந்து போன நிலையில், அதனை நிரப்ப ஆள் இல்லாமல் போனதால் அவை தற்காலிகமாக மூடி வைக்கப் பட்டன. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பலர் அவசரத் தேவைகளுக்கு வங்கியிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுக்க முடியாமல் திண்டாடினர்.












Click it and Unblock the Notifications