வங்கிகளில் டிச.10 வரை ரூ12.44 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட்
வங்கிகளில் டிச.10 வரை ரூ12.44 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் டிசம்பர் 10ம் தேதி வரை 12.44 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய ரூ.500, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு.
இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் அஞ்சலகங்களில் டெபாசிட் செய்து வருகின்றனர். இதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நீக்கியதாக இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆர். காந்தி, டிசம்பர் 10-ம் தேதி வரையில் வங்கிகளில் ரூ.12.44 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 4.61 லட்சம் கோடி ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளின் கவுண்டர்கள், ஏ.டி.எம் மையங்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.