126 வக்கீல்கள் சஸ்பெண்ட்: இந்திய பார்கவுன்சில் அதிரடி- பாதுகாப்பு வளையத்தில் ஹைகோர்ட்
சென்னை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்த விதிகளை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த 126 வழக்கறிஞர்களை இந்திய பார் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழக வழக்கறிஞர்கள் இன்று முற்றுகையிட இருந்த நிலையில் 126 தமிழக வழக்கறிஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளதால் உயர்நீதிமன்றத்தைச் சுற்றி 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய சட்டத்திருத்தம்
நீதித்துறைக்கு எதிராகவும் நீதிபதிகளுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்படும் வழக்கறிஞர்களுக்கு, நீதிமன்றமே தடைவிதிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. வழக்கறிஞர் சட்டத்தில் உயர்நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு இந்த திருத்தம் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த மே 25ஆம் தேதி அரசிதழில் அத்திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் போராட்டம்
தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் வக்கீல்கள் மீது பார் கவுன்சில் மட்டுமே இதுவரை நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த சட்டத்திருத்தத்தின்படி, வழக்கறிஞர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டால், அந்தந்த நீதிபதியே வக்கீல்களுக்குத் தடை விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. இது தங்களது பணிச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பதை உணர்ந்த வழக்கறிஞர்கள் போராட்டங்களை அறிவித்தனர்.

வழக்கறிஞர்கள் பேரணி
கோடை விடுமுறைக்குப்பின் நீதிமன்றம் வழக்கம்போல செயல்படத் தொடங்கிய, அடுத்த சில தினங்களில் எதிர்ப்பு அதிகமானது. இந்நிலையில், முதல்கட்டமாக கடந்த ஜூன் 6ஆம் தேதி, சென்னையில் மாநிலம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். ஆனாலும், இச்சட்டம் வாபஸ் பெறப்படவில்லை.

தொடர் போராட்டம்
வழக்கறிஞர் போராட்டம் தொடர்கதையானது. இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கம் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மொத்தம் 245 வழக்கறிஞர்கள் சங்கங்கள் இணைந்து மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தன.
போராட்டத்தை கைவிடக்கோரி தலைமை நீதிபதிகளும், இந்திய பார் கவுன்சிலும் கோரிக்கையையும் எச்சரிக்கையையும் விடுத்தன.

நகல் எரிப்பு போராட்டம்
உயர்நீதிமன்ற நீதிபதிகளும் இச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றார்கள். ஆனால், சட்டம் வாபஸ் பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று அறிவித்த வழக்கறிஞர்கள் கடந்த ஜூன் 29 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ரயில் நிறுத்தப் போராட்டமும், ஜூலை 1ஆம் தேதி அனைத்து நீதிமன்றங்கள் முன்பு புதிய சட்டத்திருத்த நகல் எரிக்கும் போராட்டமும் நடத்தினர்.

குடியரசுத்தலைவரிடம் மனு
இதையடுத்து டெல்லி சென்று தலைமை நீதிபதி, சட்டத்துறை அமைச்சர், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ஆகிய முக்கியத் தலைவர்களைச் சந்தித்து புதிய சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் மனு கொடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

ஹைகோர்ட் முற்றுகை
வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் இன்று உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது.

உயர் பாதுகாப்பு மண்டலம்
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் (நிர்வாகம்) வி.தேவநாதன், "ஜூலை 25ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக தெரிய வருகிறது. உயர்நீதிமன்ற வளாகம் உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், உயர்நீதிமன்றத்துக்கு வருபவர்களுக்கு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அனுமதிக்கு கட்டுப்பாடு
வழக்கமாக சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டு வழங்கப்படாது. ஏற்கெனவே 15 நாட்கள் அனுமதிச் சீட்டு பெற்றவர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வழக்குகளில் நேரடியாக ஆஜராகும் மனுதாரர்கள், சம்பந்தப்பட்ட வழக்குகள் பட்டியலிடப்பட்டால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

எஸ்.எம்.எஸ் காட்டினால்
ஆட்கொணர்வு வழக்குகளில் மட்டும் மனுதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வழக்கு விசாரணைக்காக உள்ளே வரும் வழக்கறிஞர்கள் தங்களுக்கு வந்துள்ள குறுஞ்செய்தியைக் காட்டினால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். தெற்கு நுழைவாயில் தவிர, அனைத்து நுழைவுப் பாதைகளிலும் வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

குவியும் வழக்கறிஞர்கள்
முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம் முழுக்க ஏராளமான வழக்கறிஞர்கள் நேற்று மாலை முதல் சென்னையில் குவிய ஆரம்பித்தனர். தமிழகம் முழுவதும் இருந்து சுமார் இருபதாயிரம் வழக்கறிஞர்கள் சென்னையில் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

126 பேர் சஸ்பெண்ட்
இந்த நிலையில், அகில இந்திய பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழுவில் உள்ள வழக்கறிஞர்கள் உட்பட மொத்தம் 126 வழக்கறிஞர்களை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கறிஞர்கள் எந்த நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பயிற்சி செய்யக்கூடாது என்றும், மேலும் வழக்கறிஞராகவே கருதப்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுக்க வக்கீல்கள்
கடந்த இரு மாதங்களாக போராட்டங்கள் மூலம் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் அறிவழகனும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை மாநகர் மட்டுமின்றி மாநிலம் முழுக்க உள்ள முக்கிய வழக்கறிஞர்கள் பெயர்கள், இந்த இடை நீக்க பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

2000 போலீசார் பாதுகாப்பு
டெல்லியில் நடைபெற்ற இந்திய பார் கவுன்சில் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உயர்நீதிமன்றத்தைச் சுற்றி 2000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications