பீப் பாடல்: எப்.ஐ.ஆர். - ஐ ரத்து செய்ய கோரி நடிகர் சிம்பு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பீப் பாடல் விவகாரத்தில் கோவை போலீசார் சிம்பு, அனிருத் இருவருக்கும் நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி உள்ளனர். தன் மீதான எப்ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் கடந்த வாரம் இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதில், பெண்களை கேவலமாகவும், ஆபாசமாகவும் தனது இசை ஆல்பத்தில் பாடிய நடிகர் சிம்பு, அந்தப் பாடலுக்கு இசை அமைத்த இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்போது, சிம்பு, அனிருத் ஆகிய இருவரின் உருவப் படங்களும் எரிக்கப்பட்டன.

இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள சிம்பு வீட்டை அனைத்திந்திய ஜனநயாக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து மாதர் சங்கத்தினர் பல்வேறு போராட்டாங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும், கோவை மாதர் சங்கத்தினர் நடிகர் சிம்பு மற்றும் அனிருத் மீது கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சிம்பு, அனிருத் இருவருக்கும் நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி உள்ளனர். இதற்கிடையே மற்றொரு பக்கம் சென்னை போலீசார் அவருக்கு எதிரான ஆதாரங்களை தற்போது சேகரித்து வருகின்றனராம்.
இந்நிலையில் பீப் பாடல் தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக, 3 பிரிவுகளின் கீழ் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆர். - ஐ ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3-க்கு ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications