சிம்புவின் பீப் பாடலை இணையத்தில் வெளியிட்டது யார்?... யூடியூப்-க்கு சைபர்கிரைம் போலீசார் கடிதம்
சென்னை: சிம்பு, அனிருத்தின் பீப் பாடலை இணையத்தில் வெளியிட்டது யார் என்று விளக்கம் கேட்டு யூடியூப் நிறுவனத்திற்கு சைபர்கிரைம் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.
சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் தமிழ்நாட்டில் பெருத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கோவை போலீசார் இருவருக்கும் 2 வது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில் சென்னை போலீசாரும் இந்த வழக்கில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தான் இந்தப் பாடலை இணையத்தில் வெளியிடவில்லை என்று சிம்பு கூறியுள்ள நிலையில் இந்தப் பாடலை இணையத்தில் வெளியிட்டது யார்? என்றுயூடியூப் நிறுவனத்திடம் சைபர்கிரைம் போலீசார் விளக்கம் கேட்டுள்ளனர்.

பீப் பாடல்
பீப் பாடல் வெளியிட்ட சிம்பு, அனிருத் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து சென்னை சைபர்கிரைம் போலீசார் சிம்பு, அனிருத் மீது தகவல் தொழில் நுட்ப முறைகேடு தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 சட்டப்பிரிவின் கீழ் வழக்குகளை பதிவு செய்தனர்.

நான் வெளியிடவில்லை
இந்தப் பாடலை நான் வெளியிடவில்லை யாரோ திருடி இணையத்தில் வெளியிட்டு விட்டனர் என்று சிம்பு இந்தப் பாடல் விவகாரத்தில் விளக்கம் அளித்திருந்தார்.சிம்புவின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து சென்னை போலீசார் இந்தப் பாடலை வெளியிட்டது யார்? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர்.

யூடியூப்
மேலும் இணைய தளத்தில் அந்த பாடல் எப்படி வெளியானது? வெளியிட்டவர் யார்? போன்ற விவரங்களை தெரிவிக்கும்படி ‘யூடியூப்' நிறுவனத்துக்கு சைபர் கிரைம் போலீசார் தற்போது கடிதம் அனுப்பி உள்ளனர். பாடல் சென்னையில் இருந்து வெளியிடப்பட்டதா? அல்லது வெளிநாட்டில் இருந்து வெளியிடப்பட்டதா? என்றும் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

சைபர்கிரைம் ஆலோசனை
இந்த வழக்கில் சிம்பு, அனிருத் இருவரிடமும் நேரில் விசாரணை நடத்த சைபர்கிரைம் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். மேலும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவதா? அல்லது இருவர் வீட்டிலும் சோதனை நடத்தி பாடல்களை பதிவு செய்து வைத்திருக்கும் கணினிகளை சோதனை செய்வதா? என்று சென்னை போலீசார் தற்போது தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர்.

முன்ஜாமீன்
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சிம்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று தொடங்குகிறது. சிம்புவுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது இன்று மாலைக்குள் தெரியவரும்.

கோவை போலீஸ்
முதன்முறை சம்மன் அனுப்பி சிம்பு, அனிருத் இருவரும் நேரில் ஆஜராகாத நிலையில் கோவை போலீசார் இவ்விருவருக்கும் தற்போது 2 வது முறையாக சம்மன் அனுப்பி வருகின்ற 2 ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர். இந்த முறையும் நேரில் இருவரும் ஆஜராகாவிடில் இருவரையும் அரெஸ்ட் வாரன்ட் வாங்கி கைது செய்ய கோவை போலீசார் திட்டமிட்டு இருக்கின்றனர்.

யூடியூப்
பீப் பாடல் வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் யார் என்ற விவரத்தை யூடியூப் வெளியிடும் பட்சத்தில் இந்த விவகாரத்தில் மேலும் பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications