தமிழ்நாடு போலீசாருக்கு ராயல் சல்யூட்.. வைரலாகும் பெங்களூர் மலையாளியின் பேஸ்புக் பதிவு
சென்னை: கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது ஒரு சிறு கல் கூட விழாமல் பாதுகாத்துக் கொண்டுள்ளது தமிழக காவல்துறை. இதற்காக டோல்கேட்டுகளில், வாகனங்களை சேர்த்துக்கொண்டு கர்நாடக எல்லைக்குள் சென்று பத்திரமாக விட்டு திரும்புகிறார்கள் போலீசார்.
தமிழக பதிவெண் லாரிகளை தேடி தேடி எரித்துக்கொண்டிருக்கும் கன்னட அமைப்பினரை கட்டுப்படுத்த அந்த மாநில போலீசார் தவறிவிட்டது. ஆனால் தமிழக காவல்துறையோ, ஒரு சிறு கல் கூட கர்நாடக வாகனங்கள் மீது விழாமல் பாதுகாத்து, சட்டம்-ஒழுங்கு கெடாமல் பார்த்துக்கொண்டு வருகிறது.
எப்படி என்கிறீர்களா.. அதுதான் டோல்கேட் பெட்ரோல். அதாவது டோல்கேட்டுகளில் இருந்து கர்நாடக எல்லைவரை பாதுகாப்பாக கொண்டு சென்று வாகனங்களை விட்டு வருகிறது காவல்துறை.
பேஸ்புக்கில் பதிவு
பெங்களூரில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த ஜோயல் பிந்து என்பவர் இந்த அனுபவத்தை நெகிழ்ச்சியோடு தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். ஓணம் விடுமுறை கழிந்து, மதுரை வழியாக பெங்களூர் செல்ல தனது கர்நாடக பதிவெண் காரில் ஜோயல் சென்று கொண்டிருந்ததாகவும், அப்போதுதான் தமிழக காவல்துறையின் அர்ப்பணிப்பு உணர்வை பார்க்க முடிந்தது எனவும், ஜோயல் கூறியுள்ளார்.
சாமானியருக்கும் எஸ்கார்ட்
கொல்லத்திலிருந்து, மதுரை பைபாஸ் அருகே உள்ள டோல் கேட்டில் வண்டியை நிறுத்தியபோது, அவரை ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபில் அணுகி வாகனத்தை ஓரமாக நிறுத்த சொல்லியுள்ளார்.காவேரி பிரச்னையால் அந்த வாகனத்துக்கு ஆபத்து ஏதும் நேராமல் இருக்க போலீஸ் பாதுகாப்புடந்தான் செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால் ஜோயலுக்கு ஒன்றுமே புரியவில்லையாம். சிஎம், பிஎம் என இன்றி சாதாரண ஒரு குடிமகனுக்கு போலீஸ் எஸ்கார்ட் பாதுகாப்பா.. என ஜோயல் ஆச்சரியத்தில் உறைந்துள்ளார்.
சேர்ந்தது
சிறிது நேரத்தில் கர்நாடகா பதிவெண் கொண்ட, மேலும் இரண்டு கார்கள் டோல்கேட்டில் சேர்ந்துள்ளன. அதையடுத்து, காலை பத்து மணிக்கு அவர்கள் பயணம் ஆரம்பித்துள்ளது. மதுரை பைபாஸ் எல்லை தாண்டியதும், போலீசார் திரும்பிவிடுவார்கள் என்றுதான், ஜோயல் நினைத்துள்ளார். ஆனால், போலீஸ் வாகனங்கள் ஒவ்வொரு செக் போஸ்ட்டிலும் நின்று, கர்நாடக பதிவெண் வாகனங்களைச் சேர்த்து அனுப்பிக் கொண்டே இருந்தன.
'எதுவும்' எதிர்பார்க்கவில்லை
இரவில் கர்நாடக எல்லைக்கு கார் வந்தபோது, மொத்தம் 16 வாகனங்கள் சேர்ந்திருந்தனவாம். அத்தனைக்கும், மதுரை முதலே போலீஸ் ஜீப்பில் போலீசார் பாதுகாப்பு கொடுத்தபடி பின்தொடர்ந்து வந்துள்ளனர். ஜோயல் தனது வாகனத்தை நிறுத்தி நன்றி தெரிவிக்க எண்ணினாராம். ஆனால் அதை கூட எதிர்பார்க்காமல் போலீஸ் ஜீப் விருட்டென மீண்டும் மதுரை நோக்கி பறந்ததாம்.... இது ஜோக் இல்லை. நிஜம்! என்று ஜோயல் நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
மேலிட உத்தரவாம்
கடவுள் இவர்களைப் போன்ற வைராக்கியம் மிக்க நல்ல மனிதர்களை நமக்குத் தந்து நம் நாட்டை இன்னும் பலப்படுத்துவார் என வேண்டிக்கொள்கிறேன் என்றும் ஜோயல் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக பதிவெண் வண்டி மீது ஒரு சிறு கல் விழுந்தாலும், கர்நாடக வாழ் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால், உரிய பாதுகாப்பு அளிக்க மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர் என்றும் ஜோயல் குறிப்பிட்டுள்ளார்.
வைரலாகும் பேஸ்புக் பதிவு
இந்த பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி 39 ஆயிரம் லைக்குகளை இப்பதிவு வாங்கியுள்ளது. 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர்.