“லஞ்சப் பணத்தை எலிகள் தின்றுவிட்டதா?” அரசு அதிகாரியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!
டெல்லி: "இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது" என்று பராசக்தி படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் சொல்லும் வசனம் பிரசித்தி பெற்றது. அது வெறும் திரைப்பட வசனம் மட்டும் அல்ல, உண்மையிலேயே நீதிமன்றங்கள் பல்வேறு விசித்திரமான வழக்குகளை நாள்தோறும் சந்திக்கின்றன. அப்படி ஒரு விசித்திர வழக்கை உச்சநீதிமன்றம் தற்போது எதிர்கொண்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் குழந்தை மேம்பாட்டுத் திட்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்த அருணா குமாரி என்பவர், ரூ.10,000 லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனால், அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் பாட்னா உயர் நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

பாட்னா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஒரு விசித்திரமான தகவல் இடம் பெற்றிருந்தது. லஞ்சமாகக் கைப்பற்றப்பட்ட பணத்தை நீதிமன்றப் பாதுகாப்பு அறையில் இருந்த எலிகள் தின்றுவிட்டன. அதனால் ரூபாய் நோட்டுகளை நீதிமன்றத்தில் சாட்சியமாகச் சமர்ப்பிக்க முடியவில்லை. பணம் நேரடியாக இல்லாவிட்டாலும், பாதுகாப்பு அறை பதிவேட்டில் பணம் வைப்பில் வைக்கப்பட்டதற்கான குறிப்பு இருப்பதே குற்றத்தை உறுதி செய்யப் போதுமானது என்று கூறி உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அருணா குமாரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை நீதிமன்றத்தில் சரணாவதில் இருந்து அப்பெண்ணிற்கு விலக்கு அளித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, "கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் எலிகளால் அழிக்கப்பட்டுவிட்டன என்ற தகவலை அறிந்து நாங்கள் பெரும் ஆச்சரியம் அடைந்தோம். இது மாநில அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு மட்டுமல்ல, பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது. எலிகள் பணத்தைத் தின்றன என்ற விளக்கம் நம்பத்தகுந்ததாகத் தெரியவில்லை." எனத் தெரிவித்து, ஆதாரங்கள் அழிக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அருணா குமாரிக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்தனர். மேலும், அருணா குமாரிக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.
இது மாநிலத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய வருவாய் இழப்பு.. இதுபோன்ற குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் ரொக்கம், பொருட்கள் உள்ளிட்டவை பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படாததால், இதுபோன்று எவ்வளவு ரொக்கம் அழிக்கப்படுகின்றன எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications