பெங்களூரு குண்டுவெடிப்பில் பலியான பவானியின் உடல் தகனம்.. நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி
சென்னை: பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பவானியின் உடல் இன்று சென்னையில் தகனம் செய்யப்பட்டது.
காரைக்குடியைச் சேர்ந்தவர் பாலன். இவர் தனது மனைவி பவானி, மகன், மகளுடன் சென்னை அண்ணா சாலையின் பின்புறம் உள்ள பார்டர் தோட்டடம் பகுதியில் வசித்து வருகிறார்.

பாலனின் அண்ணன் மகேந்திரன் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். தற்போது பிள்ளைகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் தனது குடும்பத்துடன் பெங்களூர் போயிருந்தார் பாலன். அங்கு ஒரு நாள் இருந்து வி்ட்டு, மனைவி, குழந்தைகளை அண்ணன் வீட்டில் விட்டு விட்டு ஊர் திரும்பி விட்டார்.

தனது பிள்ளைகளுடன், கணவரின் அண்ணன் குடும்பத்தாருடன் விடுமுறையைக் கழித்து வந்த பவானி, நேற்று முன்தினம் இரவு அனைவருடனும் சர்ச் சாலையில் போய்க் கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பில் சிக்கி படுகாயமடைந்து பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. இரவில் உடல் சென்னை வந்து சேர்ந்தது.

அங்கு பவானியின் வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பவானியின் உடலுக்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து இன்று பிற்பகல்வாக்கில் பவானியின் இறுதிச் சடங்குகள் தொடங்கின. அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஐஸ் அவுஸ் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இதில் உறவினர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பவானி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இறுதிச் சடங்கு மற்றும் ஊர்வலத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications