விடாது மிரட்டும் கனமழை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்! கோயம்பேட்டில் குவிந்ததால் பரபரப்பு!!
சென்னை: விடாது கொட்டித் தீர்த்து வரும் மழையினால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், சென்னையிலிருந்து வெறுத்துப்போய் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வது அதிகரித்து வருகிறது.
சென்னையில், கடந்த 25 நாட்களாக தொடர்ந்து விடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொட்டித் தீர்த்த கனமழைக்கு ஒரே நாளில் சென்னை மற்றும் தாம்பரம் புறநகர் பகுதிகளில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் வீடுகளை மூழ் கடிக்கும் அளவுக்கு மழைநீர் தேங்கியது. இதனால் லட்சக்கணக்கானோர் வீடுகளை காலி செய்து விட்டு நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.

தொடர்ந்து பெய்த பேய் மழைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளகாடானது. மீண்டும் மீண்டும் மழை பெய்து வருவதால் மக்கள் செய்வது அறியாது திகைத்து போயுள்ளனர். மழையும் விட்டபாடில்லை பலரது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்து, பொருட்களை இழந்து, தங்க இடம் இன்றி, சரியான உணவு, குடிதண்ணீர் கிடைக்காமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே சென்னை மக்களை அச்சுறுத்தும் வகையில் நேற்று காலையில் மீண்டும் கனமழை கொட்டியது. இதன் காரணமாக வெள்ளம் வடிந்திருந்த பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக மாறி வருகிறது. மீண்டும் மழை பெய்யத் துவங்கியுள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டு விடுமோ என்கிற பீதி நிலவி வருகிறது.

இந்நிலையில் தங்க இடமின்றி, உணவு, மாற்று உடை கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் சென்னையை விட்டு தங்களது சொந்த ஊர்களுக்கே திரும்பிச் செல்வதற்காக கோயம்பேடு, எழும்பூர் ரயில் நிலையங்கள் செல்லும் பேருந்துகளல் கூட்டம் அலைமோதியது.
மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியும் என்ற போதிலும், பல வழித்தடங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், வடபழனி, கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில், பயணிகள், பல மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வேறு வழி இல்லாமல் ஒரு வழியாக கோயம்பேடு வந்து சேர்ந்த மக்களுக்கு
இன்னும் ஒரு சேதனை காத்திருந்தது. திருச்சி, மதுரை, திண்டுக்கல், கோவில்பட்டி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல அதிக பேருந்துகள் இயக்கப்படாதல் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நீண்ட தூர பேருந்துகளாக இயக்காமல் விழுப்புரம், திருச்சி, வாலஜாபாத், திண்டிவனம் என கட்சர்வீஸ் பேருந்துகளாக இயக்கப்பட்டதால் பயணிகள் மாறி மாறி செல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு நேற்று ஏராளமான மக்கள் சென்னையிலிருந்து தொடர்ந்து திரும்பிக் கொண்டிருக்கின்றனர். மேலும், இந்த வெள்ளத்தால் தங்களது உடமைகளை இழந்து பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் தற்பொழுது சொந்த ஊரை நோக்கி வந்துள்ளதாக வருத்ததுடன் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications