பைக் ரேஸ் பயிற்சியில் விபரீதம் – பெங்களூர் வீரர் கோவையில் பரிதாப பலி!
கோவை: கோவையில் பைக் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
போத்தனுாரை அடுத்த செட்டிபாளையம் கரிமோட்டார் ஸ்பீடுவேயில் இன்றும், நாளையும் மோட்டார் பைக் பந்தயம் நடக்க இருக்கின்றது.
இதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் நேற்று முன்தினம் முதல் பயிற்சியில் ஈடுபட்டனர். அதுபோல, பெங்களூர் ராமகிருஷ்ண ஹெக்டே நகரை சேர்ந்த இர்பான் பாஷா என்ற 27 வயதான இளம் வீரரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று மாலை 5.00 மணியளவில் பயிற்சியின்போது இர்பான் பாஷாவின் பைக் திடீரென்று விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்தவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இரவு 8.00 மணியளவில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தினால் அங்கு பெரும் துயரம் நிலவி வருகின்றது.