இந்தியா- வங்கதேச எல்லை வரையறை மசோதா நிறைவேற்றம்: ஜெ., கருணாநிதிக்கு மோடி நன்றி
டெல்லி: நாடாளுமன்றத்தில் இந்தியா- வங்கதேசம் எல்லை வரையறை மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் வங்காளதேசமும் எல்லைப்பகுதியில் உள்ள சில பகுதிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள வகை செய்யும், 119 ஆவது அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று நாடாளுமன்ற மக்களவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

சபையில் இருந்த 331 உறுப்பினர்களும் மசோதாவை ஆதரித்து வாக்கு அளித்தனர். இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 41 ஆண்டுகளாக இருந்து வந்த எல்லை பிரச்சினை முடிவுக்கு வருவதோடு, 1974 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரவும் வழி பிறந்துள்ளது.
மசோதா நிறைவேறியதும், அதற்கு ஒத்துழைப்பு அளித்ததற்காக சபையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அ.தி.மு.க. உறுப்பினர் பி.வேணுகோபால், சுதிப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்), பி.மகதாப் (பிஜு ஜனதாதளம்) ஆகியோரிடம் சென்று பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
மேலும் வங்காளதேசத்தையொட்டி அமைந்துள்ள 5 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங், ஒரிசா முதல்வரும், பிஜு ஜனாதாதள தலைவருமான நவீன் பட்நாயக், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரையும் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மசோதா நிறைவேற ஆதரவு அளித்தமைக்கு நன்றி தெரிவித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications