அண்ணன் கம்யூனிஸ்ட்.. தம்பி ஆர்.எஸ்.எஸ்.. தமிழக பொறுப்பு ஆளுநரின் சுவாரசிய பின்னணி
சென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
1942ல் கரீம் நகரில் (தற்போதைய தெலுங்கானா) பிறந்தவர் வித்யாசாகர் ராவ். புரட்சிக்கு பெயர் பெற்ற உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை படித்த இவர், அப்போதே மிகவும் ஆக்டிவ். எனவே மாணவர் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஜன சங்கத்தில் உறுப்பினராக இருந்த இவர், இந்திரா காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரநிலையை எதிர்த்ததால், சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு 1985ல் இருந்து 1998 வரை மேட்பள்ளி தொகுதியில் இருந்து ஆந்திர சட்டசபைக்கு பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பின்னர் பாஜக தலைவராகவும் இருந்தார். மக்களவை தேர்தலில் போட்டியிட்டு, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் உள்விவகாரத்துறை இணை அமைச்சராகவும், வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இவரது அண்ணன் ராஜசேகர ராவ் ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவராக இருந்தவர். இன்னொரு அண்ணன் ஹனுமந்த ராவ் மத்திய ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகித்தார். 2014ல் மகாராஷ்ட்ரா ஆளுநராக நியமிக்கப்பட்டார் வித்யாசாகர் ராவ். தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications