கோவில்பட்டியில் நில அபகரிப்பு மோசடி! பாஜகவினர் மீது ஆட்சியரிடம் புகார் அளித்த சக பாஜக பிரமுகர்
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் நில அபகரிப்பு மோசடி செய்ததாக பாஜக பொறுப்பாளர்கள் மீது சக பாஜக பிரமுகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். பாஜக பிரமுகரான இவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான 2.74 சென்ட் நிலமும் இரு கடைகளும் உள்ளன. இந்த நிலையில் மாரியப்பன் வேலுமணி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார்.

அந்த கடனை அடைக்க 2.74 சென்ட் இடத்தை விற்பனை செய்ய மாரியப்பன் முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் இவருடைய பாஜக நண்பர்களான விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் நல்லதம்பி மற்றும் ஆலம்பட்டியைச் சேர்ந்த அட்டை ராசு ஆகியோர் மாரியப்பனுக்குச் சொந்தமான இடத்தை விற்பனை செய்து தருவதாக கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர்களும் சக கட்சியினர் என்ற அடிப்படையில் அவர்களை மாரியப்பன் நம்பி ஆவணங்களை கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து மாரியப்பனின் இடத்தை விற்பதற்காக பாலசுப்பிரமணியன், நல்லத்தம்பி, அட்டை ராசு ஆகியோர் கயத்தாறை சேர்ந்த பாஜக வணிகர் பிரிவு மாநில செயலாளர் அசோக்குமார் என்பவரிடம் 1 சென்ட்டுக்கு ரூ 61 லட்சம் என கிரயம் பேசி மொத்த இடத்திற்கும் 1 .67 கோடியை ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இதையடுத்து மாரியப்பன் தனது இடத்தை கிரயம் செய்து கொடுத்த நிலையில் அதற்கு சேர வேண்டிய ரூ 1.67 கோடியை தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்கள் மூவரும் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து மாரியப்பனை தொடர்ந்து மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து கோவில்பட்டி காவல் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் மன உளைச்சலுக்குள்ளான மாரியப்பன் தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தன்னை ஏமாற்றிய பாஜக பிரமுகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத் தருமாறு மனு கொடுத்துள்ளார். ஏற்கெனவே பாஜகவில் இருந்த கவுதமியின் நிலத்தை சக பாஜகவினரே மோசடி செய்ததாக அவருடைய புகாரின் பேரில் பாஜகவை சேர்ந்த அழகப்பன் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications