10.5% ஒதுக்கீட்டை எதிர்த்த டிடிவி கூட்டணியில் ராமதாஸ்! புஸ்ஸென போன ஓபிஎஸ் தர்மயுத்தம்
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கி விட்டதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அடிக்கடி கூறி வருகிறார்.
அந்தக் கூட்டணி எந்தளவுக்கு 'கொள்கைக் கூட்டி'யாக இருக்கிறது என்பது கடந்த கால சில நிகழ்வுகளை வைத்து நாம் புரிந்து கொள்வது நல்லதாக இருக்கும்.

ஏனென்றால், வாக்காளப் பெருமக்களுக்கு 'அம்னிஷீயா' நோய் அதிகம் உண்டு. ஆகவே ஞாபகப்படுத்த வேண்டியது நல்ல குடி மகனின் கடமை. ஆகவே கொஞ்சம் பழைய சம்பவங்களை அசைபோட்டுப் பார்த்தோம்.
ஆனால், அப்படி அசைபோட்டுப் பார்க்கும் போது, அரசியல் என்பது சாக்கடை என்று அடிக்கடி பாமர ஜனங்கள் சொல்லும் ஒரு வாசகம் தான் ஞாபகத்திற்கு வந்தது.
ஏன் என்கிறீர்களா? ஒரு தேர்தல் கூட்டணிக்குக் கொள்கை கோட்பாடு எல்லாம் தேவை இல்லை என்பது உண்மைதான். ஆனால், சற்றும் பொருந்தாத சகவாசம் என்பார்களே அதைப்போல் உள்ளது பாஜக அமைத்துள்ள கூட்டணி.
அது எப்படி? நீங்கள் உபி ஆள்.. அதற்காக அப்படிச் சொல்கிறீர்கள் என்று சிலர் எழுதியவரை முத்திரை குத்தி கூட சண்டைக்குப் பாயலாம். அந்த மாதிரியான ஆட்கள் இந்தக் கட்டுரையை ஜாக்கிரதையாகப் படித்து விட்டு அப்புறம் ஒரு முடிவுக்கு வரலாம்.

பாஜக 10% உயர் ஜாதிகளுக்கான இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறது. ஆனால், நீட் பரீட்சை என்பது சாதாரண மக்களைப் பாதிக்கிறது. பெரிய பணக்காரர்கள் மட்டுமே மருத்துவராக வர வழி ஏற்படுத்தி வருகிறது. பல லட்சங்களைச் செலவு செய்து ஒரு ஏழைத்தாயின் மகனால் நீட் படிக்க முடியாது என்றால் அதை ஏற்க மறுக்கிறது.
அதைப்போலத்தான் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அதற்காக உரிய இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றால், அதைக் காதில் போட்டுக் கொள்ள மறுக்கிறது பாஜக.
இப்படி இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைகளில் பாரா முகம் காட்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் டாக்டர் ராமதாஸ். இவர் வன்னியர்களுக்கு அரசு பதவிகளிலும் அரசியலிலும் உரிய அதிகாரம் இல்லை. ஆகவே இடஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக ஒரு தலைவராக முதன்முதலாக தன் முகத்தை வெளிப்படுத்தியவர்.

1980களின் பிற்பகுதிகளில் வட தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மிகப்பெரிய சாலை மறியல், போராட்டங்களில் நடத்திய டாக்டர் ராமதாஸ், ஒரு கட்டத்திற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் அடையாளமாகப் பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கினார்.
இவர் நடத்திய இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் சில உயிர்த் தியாகம் செய்தனர் என்பது வரலாறு. அந்த இடஒதுக்கீட்டு அரசியல் மூலம் தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க தலைவராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் டாக்டர் ராமதாஸ்.
இவரை நம்பி, ஒரு காலத்தில் திருமாவளவன் பாமகவுடன் கைகோர்த்து நின்றார். "தமிழ்க்குடி தாங்கி" என்ற பட்டத்தைக் கூட ராமதாசுக்கு வழங்கினார். இது எல்லாம் கடந்த கால அரசியல் வரலாறு.
ராமதாஸ் முன்வைத்த இடஒதுக்கீடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது. அதிலும் அதிகப்படியான சாதிகளை உள்ளடக்கி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதால், வன்னியர்கள் பாதிக்கப்பட்டு விட்டனர் என்று புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்தார் ராமதாஸ்.

அதற்காகத்தான் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக 10.5% வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி வழங்கச் சட்டம் இயற்றினார்.
அந்த 10.5% இடஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்தவர் டிடிவி தினகரன். கடந்த 4 மாதங்கள் முன்னதாக 10.5% இடஒதுக்கீட்டால்தான் எடப்பாடி பழனிசாமி தோல்வியைத் தழுவியதாக ஒரு செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார் டிடிவி தினகரன்.
இந்த உள் ஒதுக்கீட்டு என்பது எடப்பாடி பழனிசாமி அரசியல் ரீதியாகச் செய்த தவறு என்றும் நீதிமன்றம் இதை நிச்சயம் தள்ளுபடி செய்யும் என்பது தனக்குத் தெரியும் என்றும் இது நீதிமன்றம் சரியான தீர்ப்பு எனவும் கருத்து கூறி இருந்தார்.
அப்படி ராமதாசின் ஆணி வேரையே எதிர்த்த டிடிவி தினகரன் இன்று பாமக கூட்டணியில் இணைந்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால், பாமக அவர் வந்த பிறகுத் தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது.

இப்போது பாஜக கூட்டணிக் கட்சிகளுக்காக அமைக்கப்படும் மேடையில் டாக்டர் ராமதாஸ், அதே தினகரனுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்யப் போகிறார். மூச்சுக்கு முந்நூறு தடவை இடஒதுக்கீட்டை மையப்படுத்திப் பேசும் அன்புமணி, 10.5% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலை உள்ள டிடிவி தினகரனுடன் கை கோர்த்து காட்சி தரப் போகிறார்.
இதை எல்லாம் எப்படிப் புரிந்து கொள்வது? சாமானிய வாக்காளராகிய நாம் இதை அப்படியே கடந்து போய்விட வேண்டும்? அப்படி இல்லை என்றால் டிடிவி தினகரனா? அவர் யார்? 10.5% இடஒதுக்கீடா? அப்படி என்றால் என்னவென்றே தெரியவில்லையே என்று மறந்து போய் மேடைக்கு முன் நின்று கைதட்ட வேண்டும்.
அப்படித்தானே மகா ஜனங்களே?
அப்புறம் அடுத்த விசயத்துக்கு வருவோம்.
ஒரு காலத்தில் சசிகலாவையும் டிடிவி தினகரனையும் அதிமுகவிலிருந்து நீக்கக் கையெழுத்துப் போட்டவர்தான் ஒபிஎஸ். இவரும் இபிஎஸும் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்துதான் கட்சியை வீட்டு இந்த இருவரையும் நீக்கினார்கள்.
நாம சரியாகத்தானே சொல்றோம்? தப்பா எதுவும் சொல்லலையே?
சரி, மேலே படிங்க..
ஆனால், ஒபிஎஸ் இப்போது டிடிவி தினகரன் பக்கம் சேர்ந்து பாஜக கூட்டணியில் நிற்கிறார். தினகரனுக்காகத் தேனி அல்லது வேறு ஏதோ ஒரு தொகுதியில் ஓட்டுக் கேட்டு பிரச்சாரம் செய்யப் போகிறார் ஒபிஎஸ். தனது மகன் ரவிந்திரநாத் குமாருக்காக டிடிவி தினகரன் தேனிக்குப் போய் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். எப்படி காம்பினேசன்? எப்படி நம்ம கூட்டணி கொள்கை? பார்த்தீர்களா?
ஜெயலலிதா மறைந்த பிறகு முதலமைச்சராகப் பதவியில் நீடித்து வந்த இதே ஒபிஎஸை, ராஜினாமா செய்யச் சொல்லி டிடிவி தினகரன் கன்னத்தில் அறைந்ததாக ஓபிஎஸ்சே ஒரு பேட்டி ஒன்றில் வேதனையோடு வாக்குமூலம் கொடுத்துக் கண்கலங்கி இருக்கிறார்.
இவரது குடும்பத்திற்கு எதிராகத்தான் ஒபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். அரசியல் ஞானி குருமூர்த்தியைச் சந்தித்து உதவிக் கேட்டதாகவும், அதற்கு 'நீங்க வேட்டிக் கட்டின ஆம்பளைதானே?' என்று சொன்னதாகவும் பல சம்பவங்கள் நமக்கு இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கின்றன.
வாக்காளர்களே உங்களுக்கு இன்னும் ஏதாவது நினைவில் வந்தால் அதற்கு யாரும் பொறுப்பல்ல!












Click it and Unblock the Notifications